புனே : ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் ஒடிசா எஃப்சி மற்றும் - ஏடிகே அணிகள் இடையே மோதல் நடைபெற்றது.இதில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது..
6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 22 ஆம் நாள் ஆட்டம் புனேவில் உள்ள ஸ்ரீ சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் ஒடிசா - ஏடிகே அணிகள் இடையே இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஏடிகே அணி வலது புறமிருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் ஏடிகே அணியின் மைக்கேல் சூசைராஜ் கோல் அடிக்க முயன்றார். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அனாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதே போல் 39 ஆவது நிமிடத்திலும் ஏடிகே அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அதுவும் நழுவிப்போனது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது. இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்காததால் முதல் பாதியில் 0 - 0 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் இருந்தது.
இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 59 மற்றும் 68 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து 77 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 84 மற்றும் 87 ஆவது நிமிடங்களில் ஒடிசா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அகசுக்கும், ஒடிசா அணியின் தாவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் ஏடிகே - ஒடிசா அணிகள் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
Photos Courtesy : ISL Media