புபனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 89வது நாள் ஆட்டம் புபனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் ஞாயிறன்று நடக்கிறது.
இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 24 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் உள்ள ஒடிசா எஃப்சி அணி, 17 ஆட்டங்களில் 18 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது. இது தான் ஒடிசா அணியின் கடைசி லீக் மேட்ச்.
தன்னுடைய கடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஒடிசா எஃப்சி, இதில் வெற்றி பெறும் வைராக்கியத்தில் உள்ளது. இந்த போட்டியில் கிடைக்கப் போகும் வெற்றி அந்த அணியை தகுதி சுற்றுக்கு அழைத்து செல்லாவிட்டாலும், புள்ளிகள் பட்டியலில் முன்னுக்கு செல்ல உதவும். ஆட்டம் தனது சொந்த மண்ணிலேயே நடக்கப் போவதால், ஒடிசா எஃப்சிக்கு நம்பிக்கை சற்று கூடுதலாகவே உள்ளது.
ஏனென்றால், புபனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் ஒரே ஒரு ஆட்டத்தை தவிர தான் பங்கு கொண்ட அனைத்து போட்டிகளிலும் இது வரை வெற்றி பெற்றுள்ளது ஒடிசா எஃப்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அணியின் ஜோஸப் கொம்பாவ் கூறுகையில், "எங்களுக்கு இங்கு நல்ல களம் இருக்கிறது. ரசிகர்கள் மிகவும் உற்சாகப் படுத்துகிறார்கள். ஒரு புதிய அணி, இளம் அணி இந்த அளவுக்கு விளையாடி ஐந்தாம் இடம் பிடித்தால் நல்ல விஷயம் தான். அடுத்த சீசனில், நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என்னும் நம்பிக்கை இருக்கிறது," என்கிறார்.
அரிடென் சண்டானா காயத்தின் காரணமாக வெளியேறிய பிறகு, ஒடிசா எஃப்சி அணி பெங்களூரு எஃப்சி அணியிடம் இருந்து மானுவல் ஒன்வுவை கடனாக பெற்றது. அவரும் ஒடிசா அணியை ஏமாற்றாமல் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இடைநீக்கத்திற்கு பிறகு அணிக்கு திரும்பிய ஷுபம் சாரங்கியும் கொம்பாவுக்கு நம்பிக்கை அளிக்கிறார்.
தன்னுடைய கடந்த ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற உறுதியாக உள்ளது. சீசனின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் 6-3 என்ற கோல் கணக்கில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதற்கு முந்தைய மூன்று ஆட்டங்களில் 12 கோல்களை எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்த அந்த அணி, பிப்ரவரி 7ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தை நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியுடன் விளையாடி ஒரு கோல் கூட அடிக்காமல் சமன் செய்தது. வீரர்களின் காயங்கள் அந்த அணியை ரொம்பவே பாதித்தது. ஆனால், தன்னுடைய கடந்த ஆட்டத்தில் பெங்களூருவை வென்றதன் மூலம், ஏழாவது இடத்துக்கு முன்னேறியது. எனவே, இந்த ஆட்டத்தை அது அவ்வளவு எளிதாக விடாது.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கோச் ஷட்டோரி கூறுகையில், "நாங்கள் எங்களது 18வது மேட்சை ஆடப் போகிறோம். ஆனால், இது வரை 17 முறை அணியை மாற்றியமைக்க வேண்டியதாகி விட்டது. இருந்தாலும், நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறோம் என்ற திருப்தி உள்ளது. எங்களது எதிரணியினரும் எங்களை பாராட்டவே செய்தார்கள். எங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் இருந்திருந்தால், நாங்கள் கட்டாயம் இன்னும் சிறப்பான புள்ளிகளை எடுத்திருப்போம்," என்கிறார்.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை பொறுத்தவரை, அனைவரது பார்வையும் ஒபிச்சி மீதே உள்ளது. 15 ஆட்டங்களில் 13 கோல்களை எடுத்திருக்கும் அவர், இந்த தடவை அவரது அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வாரா?
Photos Courtesy : ISL Media