புபனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஒடிசா எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியும், ஒடிசா எஃப்சி அணியும், 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 89வது நாள் ஆட்டம் புபனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 24 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருந்த ஒடிசா எஃப்சி அணி, 17 ஆட்டங்களில் 18 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் இருந்த கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை தன்னுடைய கடைசி லீக் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்தது.
தன்னுடைய கடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஒடிசா எஃப்சி வெற்றி பெறும் வைராக்கியத்தில் இருந்தது. ஆட்டம் தனது சொந்த மண்ணிலேயே நடந்ததால், ஒடிசா எஃப்சிக்கு நம்பிக்கை சற்று கூடுதலாகவே இருந்தது.
ஏனென்றால், புபனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் ஒரே ஒரு ஆட்டத்தை தவிர தான் பங்கு கொண்ட அனைத்து போட்டிகளிலும் ஒடிசா எஃப்சி வெற்றியை ருசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய கடந்த ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற உறுதியாக இருந்தது. சீசனின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எஃப்சிக்கு
எதிரான ஆட்டத்தில் 6-3 என்ற கோல் கணக்கில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டாஸ் வென்ற ஒடிசா எஃப்சி அணி இடது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. எடுத்த எடுப்பிலேயே அந்த அணியின் ஒன்வு, ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். ஆறாவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் நாராயண் ஒரு கோல் அடித்தார். 17வது நிமிடத்தில் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 28வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மெஸ்ஸியும், 36வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் ஓன்வுவும் தலா ஒரு கோல் அடித்தனர். 44வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் குடேஸ் ஒரு கோல் அடித்தார். 45வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ருத்தாரவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட நிலையில், அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது.
இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஒடிசா எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில்,
ஒடிசா எஃப்சி தனது அணியில் 46வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 50வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பிலாலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
51வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் ஓன்வு ஒரு கோல் அடித்த நிலையில், 53வது நிமிடத்தில் அந்த அணியின் குடெசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒடிசா எஃப்சி தனது அணியில் 62 மற்றும் 63வது நிமிடங்களில் மாற்றங்களை செய்தது. 81வது நிமிடத்தில் அந்த அணியின் ஓன்வுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இரு மாற்றங்களை செய்தது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் ஓபிச்சி ஒரு கோல் அடித்தார். 83வது நிமிடத்தில் ஒடிசா அணியின் கவுரவ் போராவுக்கும், 85வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஜேசேலுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
90வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் டெபருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதே சமயம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஓபிச்சி ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து 4 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. ஒடிசா எஃப்சி அணியின் டொரண் சொராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்தன.
Photos Courtesy : ISL Media