கோவா : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் மூன்றாம் அரையிறுதி ஆட்டம், கோவா எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே நாளை நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இந்த போட்டி, கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சனியன்று நடக்கிறது.
கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் சென்னையின் எஃப்சியிடம் 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் மண்ணைக் கவ்விய எஃப்சி கோவா, நாளை தனது சொந்த மண்ணில் ஆட்டம் நடைபெறுவதால் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. சென்னையின் எஃப்சியோ, தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள மும்முரமாக உள்ளது.
லீக் ஆட்டங்களில் தான் பங்கு கொண்ட 18 போட்டிகளின் மூலம் 39 புள்ளிகள் எடுத்து அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கும் எஃப்சி கோவா அணி, 18 போட்டிகளில் 29 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தில் இருக்கும் சென்னையின் எஃப்சி அணியை கோவாவில் சந்திக்கிறது.
மார்ச் 14 அன்று இதே கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் இறுதி போட்டிக்கு செல்வது யார் என்று முடிவு செய்வதில் பெரும் பங்காற்றப் போகும் போட்டி நாளை நடைபெற உள்ளதால், இரு அணிகளின் மீதும் எதிர்பார்ப்பும் அழுத்தமும் உள்ளது.
அதுவும், போட்டி தனது சொந்த ஊரில் நடப்பதாலும், எதிரில் விளையாடப் போவது கடந்த ஆட்டத்தில் தன்னை அபார வெற்றி கொண்ட சென்னையின் எஃப்சி என்பதாலும், கிளிஃபர்டு மிராண்டா தலைமையிலான எஃப்சி கோவா அணியின் மீது அழுத்தம் சற்று அதிகமாகவே உள்ளது என கூறலாம்.
ஏஎஃப்எல் சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பெற்ற முதல் இந்திய அணி என்ற பெருமையை பெற்றுள்ள கோவா எஃப்சி, தன்னுடைய வெற்றி பயணத்தை தக்க வைத்து கொள்ள நாளை அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கோச்சாக இருந்த சேர்ஜியோ லோபரா மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு கிளிஃபர்டு மிராண்டா வந்த பின்பும் வெற்றி பயணத்தை தொடர்ந்து வரும் எஃப்சி கோவா அணியின் முக்கிய ஆட்டக்காரர்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த வாரம் ஆட முடியாமல் தற்போது மீண்டும் இணைந்துள்ள எடு பிடியா, காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் பிராண்டன் ஃபெர்னான்டஸ் மற்றும் ஹூகோ பௌமஸ் ஆகியோர் உள்ளனர்.
மிராண்டா கூறுகையில், "கடந்த ஆட்டத்தின் தோல்வியிலிருந்து மீள நாளை நாங்கள் வெற்றி பெற வேண்டும். ஆனால், அதற்காக நாங்கள் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டுமென்பது இல்லை. 90 நிமிடங்கள் இருப்பதாலும், இறுதி நிமிடம் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதாலும், நாங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு சிறப்பாக விளையாடுவோம்," என்கிறார். மொர்டாடா ஃபால் மற்றும் கார்லோஸ் பெனாவும் அணியில் இருப்பதால், மிராண்டாவுக்கு திறமையான வீரர்களுக்கு நாளை பஞ்சமில்லை.
ஓவன் கொய்லியின் வருகைக்கு பின் லீக் ஆட்டங்களில் தொடர் வெற்றிகளை குவித்திருக்கும் சென்னையின் எஃப்சி அணி, நாளையும் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் உள்ளது. நெரிஜுஸ் வல்க்ஸிஸ், ரஃபேல் கிரிவெல்லாரோ, எட்வின் வன்ஸ்பால், லல்லியான்ஜுயாலா சங்க்டே, எலி சபியா மற்றும் லூசியன் கோயன் ஆகிய வீரர்கள் இந்த சீசனில் சென்னையின் எஃப்சியின் நம்பிக்கை நாயகர்கள். அனிருத் தாபாவும், ஜெர்மன்பிரீத் சிங்கும் கூட அணிக்கு வலிமை சேர்ப்பவர்கள் தான். ஆன்ட்ரி ஷெம்ப்ரியும் அணியில் இருக்கிறார்.
கொய்லி கூறுகையில், "மூன்று கோல்களுடன் முன்னணியில் இருப்பது நல்லது தான். அதற்காக, நாளைய ஆட்டத்தை நாங்கள் எளிதாக எண்ணவில்லை. மிக முக்கியமான மற்றும் சவாலான மேட்சை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம் என்பதை நன்றாக அறிந்துள்ளோம். எஃப்சி கோவா ஒரு சிறந்த அணி. நான் அவர்களை பெரிதும் மதிக்கிறேன். அவர்களின் சவாலை ஏற்கவும் தயாராக உள்ளோம்," என்கிறார்.
இறுதி சுற்றின் போட்டியாளரை தீர்மானிக்கப் போகும் நாளைய மேட்ச் யாருக்கு சாதகமாக அமையும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
Photos Courtesy : ISL Media