கொல்கத்தா : ஐஎஸ்எல் போட்டித் தொடரில் நேற்றைய (பிப்ரவரி 3) போட்டியில் ஏடிகே அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது
ஹீரோ ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 68வது போட்டியில் ஏடிகே மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இத்தொடரில் ஜாம்ஷெட்பூர் அணி 20 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்தது. ஏடிகே அணி 17 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில் இரு அணிகளும் வெற்றிக்கான உத்வேகத்துடன் களம் புகுந்தன. ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே முதல் திருப்பம் ஏற்பட்டது. ஏடிகே-வின் மானுவல் லான்சரோட் முதல் கோலை அடித்தார். இவர் அடித்த பந்து எதிரணி கோல் கீப்பர் சுப்ரதா பாலை ஏமாற்றி வலைக்குள் புகுந்தது.
அடுத்த கோலையும் லான்சரோட் அடித்தார். 33 வது நிமிடத்தில் இந்த கோல் வந்தது. இதையடுத்து முதல் பாதியில் 2 - 0 என்ற கணக்கில் ஏடிகே முன்னிலை பெற்றது.
51வது நிமிடத்தில் ஏடிகே வீரர் கெர்சன் வியரா முரட்டு ஆட்டத்துக்காக மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்து இதே காரணத்திற்காக அந்த அணியின் அரிந்தம் பட்டாச்சார்யாவும் லான்சரோட்டும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் 74வது நிமிடத்தில் நடுவரின் கவனக்குறைவால் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு பெனால்டி வாய்ப்பை இழந்தது. ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் மரியா ஆர்க்குஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்திற்கு புத்துயிர் தந்தார். இதன் பின் இரு அணிகளும் கோல் போடாத நிலையில் 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே வெற்றியை பதிவு செய்தது.