பெங்களூரு : ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளின் இந்த சீசனில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியுடன் இன்று (பிப்ரவரி 5) பெங்களூரு காண்டீரவா மைதானத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதுகிறது.
பெங்களூரு அணி தனக்கு அடுத்துள்ள அணியின் புள்ளிகளை விட மூன்று புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தாலும் இன்னும் புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
பெங்களூரு அணி 13 போட்டிகளில் விளையாடி 30 புள்ளிகளைப் பெற்று தனது பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. ஆனால் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 14 ஆட்டங்களில் விளையாடி வெறும் 10 புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
"அட்டவணைப் பட்டியலில் நாங்கள் முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம் எங்கள் உழைப்பு மற்றும் திறமைதான். மேலும் நாங்கள் விளையாட்டில் ரிஸ்க் எடுக்கத் தவறுவதில்லை. இதனால்தான் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம்" என்கிறார் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்.
நட்சத்திர வீரரான மிக்கு தற்போது மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்பி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் மிட் பீல்டர் வெர்னர் லுமிஸ்ஸா வில்லாவுத் புதிய வீரராக களம் இறங்குவதால் பெங்களூரு அணி ஒரு பலமான அணியாக திகழ்கிறது.
ஆனாலும் பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் ஷட்டரி கடந்த சில போட்டிகளில் சோபிக்கவில்லை என்பது ரசிகர்களின் வருத்தம்.
"கேரளாவில் சுற்றுச்சூழல் மிக நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன், அவர்களது ரசிகர்கள் விளையாட்டின் போது உண்மையாகவே குரல் கொடுப்பார்கள், அவர்கள் தோல்வியுற்றாலும் கூட, எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர்" என்று சொல்கிறார் குவாட்ரெட்.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 13 போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதால் இந்த சீசன் அவர்களுக்கு மோசமான ஒன்றாகவே கருதப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ்க்கு பதிலாக நெலோ விங்கடா அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஆனாலும் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் கேரளா அணி வெற்றி பெறவில்லை.
இந்த சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை வீணடித்துள்ளது. கிட்டத்தட்ட கேரள அணிக்கு கோல் அடிக்க 139 வாய்ப்புகள் கிடைத்தும் அதில் 13 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் கேரளா அணியின் தடுப்பாட்டமும் மிக மோசமாக இருந்தது.
கேரளா அணியின் அனஸ் எடத்தொடிகாவின் உடற்தகுதி மீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சந்தேஷ் ஜிங்க் முதல் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்.சி. அணியை வென்றது. தற்போது இந்த ஆட்டத்திலும் இது நடக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கேரளா அணியின் புதிய பயிற்சியாளர் நெலோ விங்கடா, "நான் அடுத்து வரும் ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறேன். அது தான் எங்களுக்கு முக்கியம். இது வரை போனது போகட்டும் அடுத்த ஆட்டத்தில் நாம் கவனத்தை செலுத்துவோம் என்றார். இன்னும் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் நாங்கள் முன்னேறுவோம்" என்கிறார்.
மேலும் தற்போதுள்ள வீரர்களே நன்றாக விளையாடுகிறார்கள். அதனால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்கிறார். கேரள அணி வெற்றிக்காக இல்லாவிட்டாலும் அணியின் பெருமையைக் காக்க இந்த போட்டியில் விளையாட உள்ளது. இதே போல் பெங்களூரு அணி தன்னுடைய முதன்மையை நிரூபிக்க களம் இறங்குகிறது.