பெங்களூரு : பெங்களூருவில் பிப்ரவரி 6 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பெங்களூரு மற்றும் கேரள அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 70 ஆவது கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணியினரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் கேரள அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த அணி வீரர் ஸ்லாவிசா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
26 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஆல்பர்ட்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கபட்டது. இதே போல் 33 அவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் எரிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 40 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் பெக்குசன் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த மூன்று நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியது. 46 மற்றும் 47 ஆவது நிமிடங்களில் பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. 57 ஆவது நிமிடத்தில் கேரள அணியின் சிமின்லெனுக்கும், 56 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் பிரீத்தம் சிங்கிற்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

62 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஆல்பர்ட் சரண் வெளியேற்றப்பட்டு மிக்கு களம் இறக்கப்பட்டார். ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் உதாந்தா சிங் ஒரு கோல் அடித்தார்.
72 மற்றும் 81 ஆவது நிமிடங்களில் கேரளா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஆட்டத்தின் 85 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷட்டரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இரு அணிகளும் சம நிலை பெற்றன.

இரண்டாம் பாதியின் முடிவில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நான்கு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
(Photos Courtesy - ISL)