டெல்லி : ஹீரோ ஐஎஸ்எல் தொடரில் திங்களன்று டெல்லி ஜவகர்லால் நேரு மைதானத்தில் நடக்கும் போட்டியில் எஃப்ஸி கோவா - டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்வதன் மூலம் பிளே ஆஃப் சுற்றை கோவா அணி மேலும் நெருங்கும்.
இத்தொடரில் தன் முதல் 11 போட்டிகளிலும் ஒரு வெற்றி கூட பெறாத டெல்லி அணி அடுத்து 2 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே இத்தொடர் முடியும் முன் அதிக பட்ச வெற்றிகளை பதிவு செய்ய ஜோசப் கோம்பாவ்- வின் அணி முனையும்.
எஃப்சி கோவா அணி முதல் 4 இடங்களுக்குள் தொடர போராடும். இந்த அணி 13 போட்டிகளில் 24 புள்ளிகளை பெற்றுள்ளது. 4 வது இடத்தில் இருக்கும் நார்த் ஈஸ்ட் அணியை விட கோவா ஒரு புள்ளியே கூடுதலாக பெற்றுள்ளது. எனினும் கோவாவை விட நார்த்ஈஸ்ட் கூடுதலாக ஒரு போட்டியில் ஆடியுள்ளது.
எதிராளிகளை அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்தும் முனைப்பில் உள்ளார் கோவா தலைமை பயிற்சியாளர் செர்ஜியோ லோபெரா. கடந்த சீசனில் 42 கோல் அடித்து முதலிடம் பெற்ற கோவா இம்முறை இதுவரை 29 கோல்களுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
இந்த அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் உள்ளன. "அதிக கோல் அடிப்பதே எங்கள் இலக்கு. அதில் நாங்கள் தீவிரம் காட்டுகிறோம்" என்கிறார் லோபெரா.
டெல்லி அணியை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே அது பின்னடைவை சந்தித்து விட்டது. "நாங்கள் நன்றாகத்தான் ஆடி வருகிறோம். கோல் அடிக்க நிறைய வாய்ப்புகளை உருவாக்கினாலும் அதில் அதிகமாக அடிக்க முடியவில்லை. அங்குதான் பிரச்னை உள்ளது. தற்காப்பிலும் நாங்கள் மேம்பட வேண்டியுள்ளது என்கிறார் டெல்லி பயிற்சியாளர் கோம்பாவ்.
டெல்லி அணிக்கு புதிதாக வந்துள்ள உலிசிஸ் டாவிலா தனது திறமையை காட்டியுள்ளார். கோவாவுக்கு எதிராக இவர் அசத்துவாரா என பார்க்க வேண்டும். கோவா அணியுடன் டெல்லி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 3-இல் மட்டுமே வென்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
ஐஎஸ்எல்லில் பட்டம் வெல்வதற்கான போட்டி இப்போது சூடு பிடித்துள்ளது. டெல்லி அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்றுள்ளது. இதனால், அடுத்து வரும் போட்டிகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.