கோவா : கோவாவில் ஜனவரி 28 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவா - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையே ஆன ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 63 ஆவது கால்பந்து போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா அணிக்கும், ஜாம்ஷெட்பூர் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கோவா அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.
ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இதே போல் கோவா அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு தரப்பினரும் தடுப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் லெனிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட முதல் பாதி நேரத்தின் முடிவில் இரு அணிகளுமே கடுமையாக மோதியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன.
அந்த இரண்டு நிமிடங்களிலும் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்தது.
பின்னர், ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 58 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாப்லோ மாற்றப்பட்டு நட்சத்திர வீரர் டிம் காஹில் களமிறக்கப்பட்டார்.
ஆட்டத்தின் 71 நிமிடத்தில் கோவா அணின் எடு பேடியா வெளியேற்றப்பட்டு அகமது களம் இறங்கினார். 74 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் கார்லசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரு அணிகளும் எத்தனை மாற்றங்கள் செய்தும் இரண்டாம் பாதியின் முடிவு வரை கோல் அடிக்க முடியவில்லை.
இதையடுத்து கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பதால் கோவா - ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையே நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது.
(Photos Courtesy - ISL)