ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி அணியை எதிர்த்து மும்பை சிட்டி அணி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜே.ஆர்.டி டாட்டா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 8) மோதுகிறது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் ஜாம்ஷெட்பூர் அணி உள்ளது. அந்த அணி மும்பை அணியை கட்டாயம் ஜெயிக்க வேண்டும்.

ஜாம்ஷெட்பூர் அணி தற்போது 20 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் 5 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 4 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், ஒரு புள்ளியைக் கூட விட்டுவிடக் கூடாது என்ற என்று ஜாம்ஷெட்பூர் அணியினர் சபதம் ஏற்றுள்ளனர்.
கடந்த மூன்று ஆட்டங்களில் ஏடிகே அணியுடன் 2 - 0 என்ற கோல் கணக்கில் தோல்வியும், கோவா அணியுடன் டிரா மற்றும் டெல்லி மைனமோஸ் அணியுடன் ஒரு வெற்றி என்ற நிலையில் ஜாம்ஷெட்பூர் அணி உள்ளது. அதே நேரத்தில் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தங்கள் அணி தடுப்பாட்டத்தில் ஈடுபடாமல் போனதே காரணம் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ.

மேலும் ஜாம்ஷெட்பூர் அணியின் நட்சத்திர வீரர்களான காஹில், மைக்கேல் சூசைராஜ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. அது மட்டுமல்லாமல் குராவ் முகி மற்றும் கார்லோஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டிம் காஹிலின் காயம் எங்கள் அணிக்கு மிகப் பெரிய இழப்பு. எங்கள் அணியில் மிக நன்றாக ஆடக்கூடிய குராவ் முகி மற்றும் கார்லோஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே போல் எங்கள் அணியின் மிகப் பெரிய ஜாம்பாவான் மைக்கேல் சூசைராஜும் தற்போது விளையாட வாய்ப்பில்லை என்கிறார் ஃபெராண்டோ.

மும்பை அணியின் எதிர் தாக்குதல் குறித்து ஜம்ஷெட்பூர் எஃப்.சி. அணி நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மும்பை அணியின் முன் வரிசையில் இருக்கும் அர்னால்ட் ஐசோகோ, மௌடொவ் சவுக்கோ மற்றும் ரபேல் பாஸ்டோஸ் ஆகியோர் ஜார்ஜ் கோஸ்டாவிடம் பயிற்சி பெற்றவர்கள். அதைக் குறித்தும் ஃபெராண்டோ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஜாம்ஷெட்பூர் அணியில் இருந்த சோஹு தற்போது மும்பை அணிக்காக விளையாடுகிறார். ஆனாலும் அவரும் காயம் காரணமாக களத்தில் இல்லை.
இந்த போட்டிக்குப் பின்னர் எங்களுக்கு மூன்று போட்டிகளே உள்ளன. அதனால் இரு அணிகளுமே கடுமையான நெருக்கடியில் உள்ளோம்.

நாங்கள் தற்போது அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளோம். அந்த இடத்தைப் பிடிக்க ஜாம்ஷெட்பூர் அணியும் விளையாடும் என்கிறார் மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.
எனவே இந்த போட்டியை மும்பை அணி வீரர்கள் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் அணுக வேண்டும் என்கிறார் ஜார்ஜ் கோஸ்டா.