கோவா : பெங்களூரு அணியின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் எஃப்சி கோவா அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?
செர்ஜியோ லோபிரா தலைமையிலான கோவா அணி 15 போட்டிகளில் விளையாடி 28 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக இன்று (பிப்ரவரி 18) ஃபடோர்டா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள போட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கோவா அணிக்கு பேருதவியாக இருக்கும்.
கோவா அணி தற்போது நல்ல ஃபார்மில் உள்ளது. தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கடைசியாக நடந்த போட்டியில் ஏடிகே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்று அசத்தியது.
ஏடிகே அணிக்கு எதிரான போட்டியில் கோவா அணியின் நட்சத்திர வீரர் ஃபெரான் கொராமினாஸ் அற்புதமாக விளையாடி வெற்றியைத் தேடித் தந்தார்.
கடந்த சீசனில் இறுதிப் போட்டியாளர்களான பெங்களூரு எஃப்.சி அணி மற்றும் சென்னையின் எஃப்.சி அணிகளுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கோவா அணி கேரளாவை வீழ்த்தி அதிகபட்ச புள்ளிகளை பெற வாய்ப்புள்ளது.
புதிய பயிற்சியாளர் தலைமையில் ஒரு சிறப்பான அணியுடன் எங்கள் அணி மோதுகிறது. நாங்கள் எங்களது முழுத் திறமையையும் காட்டுவோம். இந்த போட்டியில் நாங்கள் மூன்று புள்ளிகளை எடுப்போம் என்றும், வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என்கிறார் கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரோ.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியைப் பொறுத்தவரை புதிய பயிற்சியாளர் நெலோ விங்கடா, இந்த சீசனில் எப்படியாவது முதல் ஆறு இடங்களுக்குள் எங்கள் அணி வந்துவிடும் என்கிறார். ஆனால் விங்கடா தலைமையில் உள்ள கேரளா அணிக்கு அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஏனெனில் டேவிட் ஜேம்ஸ் தலைமையில் அந்த அணி விளையாடிய போது முதல் மூன்று போட்டிகளில் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்றது.
நெலோ விங்கடோ தலைமையேற்ற பிறகு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேரளா அணி சென்னை அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஐஎஸ்எல் போட்டிகளில் எங்கள் அணி ஒரு கௌரவமான இடத்தைப் பெறும் என்று உறுதியாக நம்பும் விங்கடா, இந்த போட்டியில் கோவா அணியை எங்கள் அணி கண்டிப்பாக வீழ்த்தும் என்கிறார்.
கொச்சியில் இது வரை நடைபெற்ற 4 போட்டிகளில் கோவா அணி 3 இல் வெற்றி பெற்றுள்ளது. அவர்களை கேரளா அணியின் பயிற்சியாளர் விங்கடா பழி வாங்குவாரா?