ஐ.எஸ்.எல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி 5 மாதங்களாக நடைபெற்று வந்தது. மொத்தம் 11 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் தலா 20 ஆட்டங்களில் விளையாடியதன் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த மும்பை சிட்டி எஃப்சி, ஏடிகே மோகன் பகான், நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எஃப்சி, எஃப்சி கோவா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
ஃபைனலிஸ்ட்
மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல ஏடிகே மோகன் பகான் அணி 3-2 என்ற மொத்த கோல் அடிப்படையில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எஃப்சி அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிகட்டம்
இந்நிலையில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பதோர்தா, நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது. லீக் சுற்றில் மோகன் பகான் அணியை 2 முறை வீழ்த்தியுள்ளதால் மும்பை அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மேலும் முதல் முறையாக கோப்பையை வெல்ல மும்பை அணியும், 4வது முறையாக சாம்பியானாகும் முனைப்புடன் ஏடிகே அணியும் களமிறங்குவதால் இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
மும்பைக்கு ஆதரவு
மும்பை சிட்டி எஃப்சி அணி முதல் முறையாக ஐஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்த அணி கோப்பையை வெல்ல ஐபிஎல்-ன் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஹர்த்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், முன்னாள் வீரர் ஜாகீர் கான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.