சென்னை: இந்தியாவில் கால்பந்து போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் ஐ எஸ் எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் என்ற கால்பந்து தொடர் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த தொடர் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே இருந்தது.
ஆனால் சமீப காலமாக இந்த தொடரில் தரம் குறைந்து வந்ததாக ரசிகர்களுடைய குற்றச்சாட்டு இருந்தது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு என ஒரு கால்பந்து தொடரை நடத்தி வருகின்றனர். அதை ஒப்பிடும்போது ஐஎஸ்எல் தொடரின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் ஐ எஸ் எல் தொடரை நடத்தும் எஃப் எஸ் டி எல் என்ற அமைப்பும், அனைத்திந்திய கால்பந்து சம்மேளமும் கடந்த 2010 ஆம் ஆண்டு 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்றை போட்டது. இந்த ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படை தன்மையில்லை என உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வெளியாகும் வரை புதிய ஒப்பந்தத்தை போடக்கூடாது என்று தடை இருக்கின்றது.
பணிகளை நிறுத்துவதாக சென்னை அணி அறிவிப்பு:
இதனால் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக ஐஎஸ்எல் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இந்த தொடருக்காக பல்வேறு அணிகள் முன்கட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் ஐ எஸ் எல் தொடர் இம்முறை நடைபெறுமா நடைபெறாதா என்று எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஏற்கனவே பெங்களூரு, ஒடிசா போன்ற அணிகள் தங்களுடைய பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இரண்டு முறை சாம்பியன் ஆன சென்னையை மையமாக கொண்டு இயங்கி வந்த சென்னையின் எப்சி கால்பந்து அணியும் தங்களது பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஐஎஸ்எல் தொடரில் எதிர்காலம் என்னவாக போகிறது என்று தெரியவில்லை.
கடினமான முடிவு என விளக்கம்:
இதனால் நாங்கள் மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்து இருக்கின்றோம். சென்னையின் எப்சி அணியின் அனைத்து பணிகளையும் நாங்கள் நிறுத்தி வைக்க போகிறோம். இந்த முடிவை நாங்கள் எளிதாக எடுக்கவில்லை. பல்வேறு கட்ட ஆலோசனை பிறகு இந்த கடினமான முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம். இந்திய கால்பந்தில் இதுபோன்று ஒரு அணியை நடத்துவது என்பது பல சவால்களை சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது.
நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு எங்களை நம்பி இருக்கும் ரசிகர்களை வெகுவாக பாதிக்கும் என்று எங்களுக்கு தெரியும். எனினும் எங்களுடைய வீரர்கள், பயிற்சியாளர்கள் குழுவினர் அவர்களின் குடும்பத்தினர் ஆகியவற்றை நாங்கள் கண்டிப்பாக பார்த்துக் கொள்வோம். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கின்றோம். நாங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு தற்காலிகமானதாக இருக்கும் என நம்புகின்றோம்.
குடும்பமாக அனைவரும் துணை நிற்போம்:
மிக விரைவில் நாம் நேசிக்கும் இந்த கால்பந்து பணிகளை மீண்டும் தொடங்குவோம் என நம்புவோம். இது தற்காலிகமானதாக இருக்கும் என நாங்கள் பிரார்த்திக்கின்றோம். இந்த பயணத்தில் எங்களுடன் இருந்த எங்கள் ரசிகர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் எங்களுடன் துணை நில்லுங்கள். எங்களை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நல்ல நாட்கள் விரைவில் வரும் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்.
சென்னையின் எப்சி என்பது ஒரு கால்பந்து அணி கிடையாது. நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்தோம். ஒவ்வொரு குடும்பத்தினரும் நெருக்கடியான கட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பார்கள். அதைப் போல் நாமும் இம்முறை இருக்க வேண்டும் என்று சென்னையின் எப்சி அணி தெரிவித்துள்ளது.