மும்பை: ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடருக்காக, மும்பை சிட்டி எப்சி அணி, அர்ஜென்டினாவின் தடுப்பாட்டக்காரர் பகுன்டோ கார்டோசோவை ஒப்பந்தம் செய்துள்ளது.
21 வயதாகும், பகுன்டோ கார்டோசோ, 2013-14ல் முதல் முதலாக லீக் ஆட்ட்களில் கால் பதித்தார். இளம் வயதுடையவராக இருந்தாலும், அர்ஜென்டினா மற்றும் பொலிவியாவின் முன்னணி அணிகளுக்காக பகுன்டோ கார்டோசோ விளையாடியுள்ளார். 2011ல் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோர் கால்பந்தாட்டத்தில், அர்ஜெண்டினா அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர் பகுன்டோ கார்டோசோ.
40க்கும் மேற்பட்ட லீக் போட்டிகளில் ஆடிய அனுபவம் இவருக்கு உள்ளது. மும்பையுடனான ஒப்பந்தம் குறித்து, பகுன்டோ கார்டோசோ கூறுகையில், இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், மும்பை ரசிகர்களுக்காக விளையாடுவதற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மும்பை அணியின் தலைமை செயல் அதிகாரி இந்திரானில் தாஸ் ப்ளா கூறுகையில், பகுன்டோ கார்டோசோ சிறப்பான வீரர். இளம் வயதில் அவர் படைத்த சாதனைகள் அதற்கு சாட்சி. மும்பையுடன் அவர் இணைவது மகிழ்ச்சி என்றார்.