டெல் அவிவ்: உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை வைத்து ஈரான் மக்களுக்கு வித்தியாசமான ஒரு அறிவுரை + அழைப்பை விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாஹு.
இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் கால்பந்து ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நதன்யாஹு பேசுகிறார்.
அந்த பேச்சின் விவரம்:
ரொனால்டோவின் கோலைத் தடுப்பது சாத்தியமானது? ஆனால் அதை ஈரான் செய்துள்ளது. சாத்தியமே இல்லாததை அது செய்து முடித்துள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் காட்டிய இதே வீரத்தை, ஈரானிய மக்கள் ஈரான் தெருக்களில் காட்ட முன்வர வேண்டும்.
ஈரானில் பல பிரச்சினைகள் உள்ளன - காற்று மாசு, குடிநீர்ப் பஞ்சம், சிரியா, ஏமனில் தேவையில்லாமல் தீவிரவாதத்திற்காக பெரும் பணத்தை செலவழிப்பது என பிரச்சினைகள் உள்ளன.
ஈரான் அரசு இதையெல்லாம் விட்டு விட்டு மத்திய கிழக்கில் தேவையில்லாத போர்களில் ஈடுபடுவதை விட்டு விட்டு அந்தப் பணத்தையெல்லாம் ஈரான் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க செலவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்
ஈரான் மக்கள் பூகம்பத்தால் அவதிப்பட்டபோது மருத்துவ சிகிச்சைகளை அளிக்க உத்தரவிட்டேன். ஈரான் அமைதிக்காக தொடர்ந்து வாதிட்டு வருகிறேன். ஒருநாள் சுதந்திர டெஹ்ரானில் இஸ்ரேலும், ஈரானும் கால்பந்துப் போட்டியில் விளையாடும் காலம் வரும். அதில் இருவருமே வெல்வோம் என்று கூறியுள்ளார் பெஞ்சமின் நதன்யாஹு.
பேச்சின்போது தானும் ஒரு கால்பந்து வீரர் என்று கூறிய நதன்யாஹு, கால்பந்தை பாஸ் செய்வதையும் செய்து காட்டி அசத்தினார். நதன்யாஹுவின் இந்த வீடியோ செய்திக்கு கலவையான கருத்துக்கள் அவரது டிவிட்டரில் குவிந்து வருகின்றன.
பி.கு: உலகக் கோப்பைத் தொடரில் திங்கள்கிழமை நடந்த தொடரில் ஈரானும், போர்ச்சுகலும் மோதின. அப்போது போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒரு கோல் முயற்சியை ஈரான் கோல் கீப்பர் அலிரஸா பெய்ரன்வாட் அபாரமாக முறியடித்தார். இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
Could you stop Ronaldo from scoring a goal?! pic.twitter.com/2M4m4GRsIv
— Benjamin Netanyahu (@netanyahu) June 27, 2018