ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் நடந்த இண்டர் மியாமியின் சீசனுக்கு முந்தைய நட்பு போட்டியில் விளையாட முடியாமல் போனது "அவமானம்" என்று லியோனல் மெஸ்ஸி கூறினார், இந்த நட்பு போட்டியில் லியோனல் மெஸ்ஸி பங்கேற்பார் எனக் கருதி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். ஆனால், மெஸ்ஸி வராததை அடுத்து கோபமடைந்த ரசிகர்கள் டிக்கெட் பணத்தைத் திரும்பக் கோரினர்.
தொடை எலும்பு காயத்தால் அவதிப்பட்டு வரும் மெஸ்ஸி இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாத நிலையில், ஹாங்காங் XI அணியை 4-1 என்ற கணக்கில் இன்டர் மியாமி தோற்கடித்தது. எட்டு முறை சிறந்த கால்பந்து வீரர் விருது வென்ற மெஸ்ஸியை நேரில் காணலாம் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்த ஏராளமான உள்ளூர் ரசிகர்களுக்கு கோபம் ஏற்பட்டது.

போட்டிக்கு பிந்தைய உரையில் இன்டர் அணியின் சக-உரிமையாளர் டேவிட் பெக்காம் பெரும் ஆரவாரத்துக்கு நடுவே பேசி சூழ்நிலையை சமாளித்தார். அதே நேரத்தில் ஹாங்காங் அரசாங்கம் மெஸ்ஸி விளையாடாதது குறித்து முன்பே "விரிவான விளக்கத்தை உடனடியாக வழங்கத் தவறியதற்காக" அமைப்பாளர்கள் மீது தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
2023 உலகக் கோப்பை வெற்றியாளரான லியோனல் மெஸ்ஸி இது குறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸில் காட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்: "துரதிர்ஷ்டவசமாக கால்பந்தில் எந்த விளையாட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நமக்கு காயம் ஏற்படலாம். அது எனக்கு நடந்தது. ஹாங்காங் போட்டியில் என்னால் விளையாட முடியவில்லை, அது அவமானமாக இருந்தது, ஏனென்றால் நான் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க விரும்புபவன். நான் அந்தப் போட்டியில் ஆட விரும்பினேன்." என்றார் மெஸ்ஸி.
மேலும், "நாங்கள் இவ்வளவு தூரம் பயணித்து வந்த போதும், எங்கள் போட்டிகளைப் பார்க்க மக்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். நாங்கள் திரும்பி வந்து மற்றொரு போட்டியில் விளையாடுவோம் என்று நம்புகிறேன். அப்போது என்னால் முடிந்தவரை விளையாட முயற்சி செய்வேன். . ஆனால், என்னால் பங்கேற்க முடியாமல் போன ஆட்டம் இது என்பதே உண்மை."என்றார் மெஸ்ஸி.