ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் டிசம்பர் 1 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையான ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 45 ஆவது கால்பந்து போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும், நார்த் ஈஸ்ட் யுனைடட் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறமிருந்து ஆட்டத்தை தொடங்கியது.
தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சீராக விளையாடினர். ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இரு அணி வீரர்களும் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என்று விளையாடினர்.
ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் என இரு அணிகளுக்குமே கோல் அடிக்க பல முறை வாய்ப்பு கிடைத்தும் அதை நழுவவிட்டனர்.
ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மிஸ்லேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 45 ஆவது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளுமே கோல் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் சுமீத் பாஸி வெளியேறினார். அவருக்குப் பதில் ஃபாருக் சௌத்ரி களம் இறங்கினார். இதே போல் 68 ஆவது நிமிடத்திலும், 76 ஆவது நிமிடத்திலும் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 4 நிமிடங்களிலும் ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் அணிகள் கோல் அடிக்காததால் ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
(Photos Courtesy - ISL)