லிவர்பூல் : லிவர்பூல் அணி வீரர்கள் ட்ரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்ட், தியாகோ அல்காண்டரா மற்றும் டொமினிக் ஸ்ஸோபோஸ்லாய் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய உடனேயே மீண்டும் மோசமான காயங்களை அடைந்து வெளியேறி உள்ளனர்.
சமீபத்திய வாரங்களில் அந்த வீரர்களை காயத்தில் இருந்து மீண்டதாகக் கூறி அணிக்கு திரும்ப அழைத்து இருந்தார் லிவர்பூல் பயிற்சியாளர் ஜூர்கன் க்ளோப். ஆனால், தான் அவர்கள் காயம் குணமாகும் முன்பே அவர்களை அழைக்கவில்லை என கூறினார் க்ளோப்.
அலெக்சாண்டர்-அர்னால்ட் இந்த மாத இறுதியில் கராபோ கோப்பை இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழக்க நேரிடும், ஏனெனில் கடந்த வாரம் பர்ன்லிக்கு எதிரான போட்டியில் அவருக்கு முழங்கால் பிரச்சனை மீண்டும் ஏற்பட்டது, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய தியாகோவின் மறுபிரவேசம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

அதே போல, ஸ்ஸோபோஸ்லாய் தொடையில் தசைப் பிடிப்பு பிரச்சனைக்கு ஆளாகுவதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாடினார். இது அவரை ஜனவரி மாதத்தின் பெரும்பகுதியை இழக்கச் செய்தது.
காயத்தில் இருந்த மற்றொரு முக்கிய வீரர் மொஹமத் சலா ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த வாரம் பயிற்சிக்குத் திரும்பினார், எகிப்து அணியுடனான ஆப்பிரிக்க நேஷன்ஸ் கோப்பை தொடரின் போது அவருக்கு தொடையில் தசைப்பிடிப்பு பிரச்சனை ஏற்பட்டது, ஆனால், க்ளோப் அவர் தற்போது மீண்டும் விளையாடத் தயாராக இருப்பதாக நம்புகிறார்.
"மொஹமத் சலா மீண்டும் முழுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார், அதனால் இயல்பாகவே அவர் போட்டிகளில் பங்கேற்பார்" என்று க்ளோப் கூறினார், அவர் தனது 10வது சிறந்த பயிற்சியாளருக்கான மாதாந்திர விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொஹமத் சலா அணிக்கு திரும்பியதைத் தவிர, இப்ராஹிமா கோனேட்டை இடைநீக்கத்திலிருந்து திரும்பப் பெற்றுள்ளார் க்ளோப். ஜோ கோம்ஸ் மற்றும் கோல்கீப்பர் அலிசன் பெக்கர் மீண்டும் உடல் தகுதி பெற்றுள்ளனர் மற்றும் கானர் பிராட்லி தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து எடுத்த விடுப்பில் இருந்து அணிக்கு திரும்பினார். இதை அடுத்து லிவர்பூல் அணி மீண்டும் வலுப் பெறத் துவங்கி உள்ளது.