"என் ஹீரோ மெஸ்ஸி தான்" கேரளா டூ கத்தார்.. 5 குழந்தைகளுடன் காரிலேயே பயணித்து கத்தார் சென்ற பெண்!
தோஹா: நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் காண கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் காரிலேயே கத்தார் பயணித்துள்ள சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆசிய அணிகளின் எழுச்சி இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பின் கால்பந்து விளையாட்டுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் கேரளாவில் கிரிக்கெட்டை விடவும், கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அண்மையில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மாருக்கு பிரம்மாண்ட பேனர்கள் வைத்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்தனர். அதுமட்டுமல்லாமல் கத்தார் நாடு இந்தியாவுக்கு அருகில் இருப்பதால், ஏராளமான ரசிகர்கள் கத்தார் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளா டூ கத்தார்
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகை ஒருவர் தனது 5 குழந்தைகளுடன் கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரை நேரில் காண இந்தியாவில் இருந்து கத்தாருக்கு மஹிந்திரா தார் வாகனத்தில் சென்றுள்ளார். அர்ஜென்டினா ஜெர்சியுடன் மஹிந்திரா காரில் அந்த பெண் தனது 5 குழந்தைகளுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

5 குழந்தைகளுடன் பயணம்
கேரளாவை சேர்ந்த நாஜி நௌஷி என்ற பெண் கேரளாவில் இருந்து காரில் புறப்பட்டு மும்பை சென்றுள்ளார். மும்பையில் இருந்து கப்பல் வழியாக ஓமனில் காருடன் களமிறங்கிய அவர், மீண்டும் மஸ்கட் வந்து அங்கிருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளார். இதில் அவர் மட்டுமல்லாமல் அவரின் 5 குழந்தைகளும் பயணம் மேற்கொண்டுள்ளது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெஸ்ஸி தான் ஹீரோ
இந்த பயணம் குறித்து நாஜி நெளஷி கூறுகையில், நான் எனது ஹீரோவை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையில் மட்டுமே பயணித்து வந்துள்ளேன். சவுதி அரேபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது சோகம் அளித்தது. ஆனால் உலகக்கோப்பையை கைப்பற்றும் பயணத்தில் இது ஒரு சிறு சறுக்கல் மட்டுமே என்று தெரிவித்தார்.

சமையல்
தொடர்ந்து, மஹிந்திரா காரிலேயே அரிசி, தண்ணீர், பருப்பு மற்றும் பழங்கள் வைத்துக் கொண்டு பயணித்து வருகிறார். இதுகுறித்து நாஜி நெளஷி கூறுகையில், இந்த பயணத்தில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சமைக்கிறேன். இதன் மூலம் பணத்தை சேமிக்க முடிவதோடு, குழந்தைகளின் உணவு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடிகிறது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications