எங்களுக்கு விழுந்த பெரிய அடி.. எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.. தோல்வி குறித்து மெஸ்ஸி கருத்து
தோஹா : ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் அர்ஜென்டின அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறும் நிலையில் உள்ள அர்ஜென்டினா அணி எஞ்சிய இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
இல்லையென்றால் தனது கடைசி உலக கோப்பை தொடரில் விளையாடும் மெஸ்ஸி, முதல் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

பெரிய இடி
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய அர்ஜென்டின வீரர் மெஸ்ஸி, இந்தத் தோல்வி எங்களுக்கு விழுந்த மிகப் பெரிய இடி. இந்த தோல்வி எங்களை வெகுவாக காயப்படுத்தி இருக்கிறது.இருப்பினும் எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து தொடர்ந்து போராட வேண்டும். இந்த ஒரு தோல்வியின் மூலம் நாங்கள் எங்கள் போராடும் குணத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

மனம் தளரவில்லை
மெக்சிகோவுக்கு எதிரான அடுத்த போட்டியில் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். சவுதி அரேபியா ஒரு நல்ல அணியாக விளங்குகிறது. அந்த அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பந்தை நன்றாக கடத்தி சென்று விளையாடுகிறார்கள். எங்கள் அணி இந்த தோல்வியால் மனம் தளரவில்லை. நாங்கள் எப்போதும் போல் மனதளவிலும் பலமாக தான் இருக்கிறோம்.

ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது
இது போன்ற சூழ்நிலையில் இருந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. தற்போது ஒரு அணியாக எங்களுடைய குணத்தை நாங்கள் வெளி காட்டுவோம். நாங்கள் எங்களுடைய அடிப்படை ஆட்டத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும். நாங்கள் யார் என்று அறிந்து விளையாட வேண்டும். தற்போது எங்களுக்கு முன் காத்திருக்கும் சவால்களை கருத்தில் கொண்டு அடுத்த போட்டியில் களம் இறங்குவோம் .

எங்களை நம்புங்கள்
நான் ரசிகர்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எங்களை நம்புங்கள், நாங்கள் உங்களை கைவிட மாட்டோம். இந்த தோல்விக்கு நான் எந்த காரணத்தையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் முன்பை விட இப்போதுதான் நாங்கள் ஒரே அணியாக நிற்கிறோம் என்று மெஸ்ஸி கூறியுள்ளார். தனது வாழ்வா சாவா என்ற அடுத்த போட்டியில் 27ஆம் தேதி நள்ளிரவு 12 30 மணிக்கு மெக்சிகோவை எதிர்த்து அர்ஜெண்டினா விளையாடுகிறது .


Click it and Unblock the Notifications