அசன்சியான்: பிரபல கால்பந்து தொடர் மீது குற்றம் சுமத்தியதற்காக நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோபா கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது. அந்த தொடரில் 3வது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலி, அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த மெஸ்சி, இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது.
போட்டியில் ஊழல் மலிந்துவிட் டது. ஊழலும், நடுவர்களும் கால்பந்து விளையாட்டின் சுவாரஸ்யத்தை கெடுக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார். அவரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மெஸ்சிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட 3 மாதங்கள் தடை, 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் ஆகியவற்றை தென் அமெரிக்கா கால்பந்து கூட்டமைப்பான கான்மெபோல் விதித்து இருக்கிறது. பராகுவே நாட்டின் அசன்சியான் நகரில் நடைபெற்ற கான்மெபோல் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த முடிவை எதிர்த்து மெஸ்சி முறையீடு செய்ய ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான இந்த தடை நீக்கப்படாவிட்டால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிலி, மெக்சிகோ மற்றும் ஜெர்மனியுடன் நடைபெற உள்ள போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். தடை காரணமாக அவரது ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.