வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சி: 6 வருட சிறைக்கு வாய்ப்பு
மாட்ரிட்: வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியை விடுவிக்க முடியாது என்று ஸ்பெயின் கோர்ட் திட்டவட்டமாக கூறிவிட்டது.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரரான லியோனல் மெஸ்சி ஸ்பெயினின் பார்சிலோனா மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில், கடந்த 2007-09ம் ஆண்டிற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக லியோனல் மெஸ்சி மீதும், அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்சி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

இவர்கள் இருவரும் பெலிஸ், உருகுவே போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்சியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமையை விற்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் ஸ்பெயினில் 4 மில்லியன் யூரோவிற்கு மேல் வரி கட்டாமல் தவிர்த்து வந்தனர் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இது குறித்து அரசு வக்கீல் ரக்கெல் அமடோ, பார்சிலோனா மாவட்டத்தில் உள்ள கவா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தனது நிதி விவகாரங்களை தந்தைதான் கவனித்து வருவதால் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மெஸ்சி கேட்டுக் கொண்டார். ஆனால் தவறு நடந்திருப்பதை அறிந்துகொள்ள நிதி நிர்வாகியாக இருக்க தேவையில்லை என்று கூறிய நீதிபதி, வழக்கில் இருந்து மெஸ்சியை விடுவிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளார்.
எனவே லியோனல் மெஸ்சியும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மெஸ்சி அதிகமான அபராதத் தொகையுடன், ஆறு ஆண்டு சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications