கொல்கத்தா: உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ளார். GOAT Tour என அழைக்கப்படும் இந்த சுற்றுப்பயணம் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புது டெல்லி என நான்கு முக்கிய நகரங்களுக்கு மெஸ்ஸி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, மெஸ்ஸியின் முன்னாள் பார்சிலோனா அணி சக வீரரும் லூயிஸ் சுவாரஸ்ஸையும், FIFA உலகக் கோப்பை வென்ற ரோட்ரிகோ டி பாலும், இந்த சுற்றுப்பயணத்தில் இணைத்துள்ளார்.

GOAT டூர் நிகழ்வுகளில், மெஸ்ஸி பொதுவெளியில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் 'டிஸ்ட்ரிக்ட்' ஆப் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான நகரங்களில் டிக்கெட்டின் ஆரம்ப விலை ₹4,500 ஆக உள்ளது. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும், இது ₹8,250 லிருந்து தொடங்குகிறது.
மியாமி நகரில் இருந்து கிளம்பும் மெஸ்ஸி, பயணக் களைப்பைப் போக்க துபாயில் சிறிது நேரம் தங்கிவிட்டு, அதிகாலை 1:30 மணியளவில் கொல்கத்தாவை வந்தடைவார். வந்திறங்கிய உடனேயே, காலை 9:30 மணி முதல் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
டிசம்பர் 13ஆம் தேதி கொல்கத்தாவில், மெஸ்ஸி காலை 9:30 முதல் 10:30 மணி வரை ரசிகர்களை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து, காலை 10:30 முதல் 11:15 மணி வரை அவரது உருவ சிலை திறப்பு விழா நடைபெறும். பின்னர், 11:15 மணியளவில் யுவா பாரதி மைதானத்திற்கு வருகிறார்.
யுவா பாரதியில், காலை 11:30 மணிக்கு நடிகர் ஷாருக்கான் வர உள்ளார்.
நண்பகல் 12:00 மணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சௌரவ் கங்குலியும் மைதானத்திற்கு வந்து மெஸ்ஸியை சந்திக்கிறார்கள். நண்பகல் 12:00 முதல் 12:30 மணி வரை மெஸ்ஸி நட்புரீதியான போட்டி, பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்று, பிற்பகல் 2:00 மணிக்கு ஹைதராபாத் புறப்படுவார்.
அன்று மாலை 7:00 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மெஸ்ஸி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் 7 பேர் கொண்ட கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார். அப்போது மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சியும் இடம்பெறும்.
டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில், பிற்பகல் 3:30 மணிக்கு கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் நடைபெறும் பேடல் கோப்பை நிகழ்வில் மெஸ்ஸி கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு பிரபலங்களுக்கான கால்பந்து போட்டி மற்றும் 5:00 மணிக்கு வான்கடே மைதானத்தில் ஒரு நிகழ்ச்சியும் நடைபெறும்.
வான்கடே நிகழ்வைத் தொடர்ந்து, ஒரு தொண்டுக்கான ஃபேஷன் ஷோ, 2022 உலகக் கோப்பையின் நினைவுப் பொருட்களை ஏலம் விடுதல், நிதி திரட்டுதல் போன்ற செயல்பாடுகளில் மெஸ்ஸி ஈடுபடுவார். மேலும், லூயிஸ் சுவாரஸ்ஸுடன் இணைந்து ஒரு ஸ்பானிஷ் இசை நிகழ்ச்சியும் மும்பை நிகழ்வில் இடம்பெற உள்ளது.
இதனை தொடர்ந்து GOAT Tour டிசம்பர் 15ஆம் தேதி புது டெல்லியில் நிறைவடைகிறது. அங்கு மெஸ்ஸி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார். பின்னர், அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மினர்வா அகாடமி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் நிகழ்விலும் பங்கேற்க உள்ளார்.
மெஸ்ஸியின் இந்தியாவின் இரண்டாவது வருகை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடந்த வெனிசுலாவுக்கு எதிரான நட்புரீதியான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக விளையாடினார்.
அந்தப் போட்டியில் மெஸ்ஸி சிறப்பாக விளையாடி, அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற ஒரு கோலுக்கு உதவியாக இருந்தார்.