மெஸ்ஸி திறமையை ஒரு போட்டியை வைத்து முடிவு செய்ய கூடாது.. கங்குலி பாராட்டு
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, மெஸ்ஸியின் சாதனைகளை ஒரே ஒரு போட்டியின் முடிவை வைத்து மதிப்பிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட ஒரு ஏமாற்றமளிக்கும் தோல்விக்காக, அவரது நீண்டகால சாதனைகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. கூடுதல் நேரத்தில் பெரான் டோரஸ் அடித்த கோல், ஸ்பெயின் அணிக்கு இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

இது குறித்து பேசிய கங்குலி, "லியோனல் மெஸ்ஸியின் சாதனைகளை ஒருபோதும் ஒரேயொரு போட்டியைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், அவரும் ஒரு மனிதர்தான். தினசரி யாராலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. சில நாட்கள் நமக்கு சாதகமாக அமையாமல் போகலாம். ஒரே ஒரு இறுதிப் போட்டி அல்லது ஒரு ஆட்டத்தை வைத்துக்கொண்டு அவருடைய ஒட்டுமொத்த விளையாட்டு வாழ்க்கையையும் மதிப்பிடுவது நியாயமற்றது" என்று கங்குலி கூறினார்.
"மெஸ்ஸி ஏற்கனவே உலகக் கோப்பையை வென்றுள்ளார், எண்ணற்ற சாதனைகளை முறியடித்துள்ளார் மற்றும் தனது அசாத்திய திறமையால் வரலாற்றின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்த ஒரு தோல்வி அவரது சாதனைகளையோ அல்லது அவரது பெருமையையோ எந்த வகையிலும் குறைத்துவிடாது" என்று அவர் கூறினார்.
"நான் உலகக் கோப்பை முழுவதையும் பார்க்கவில்லை, ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் உட்பட சில முக்கியமான போட்டிகளைப் பின்தொடர்ந்தேன். இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை ஆரம்பத்திலிருந்தே தங்களது இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதிக்கவில்லை. யுத்தி ரீதியாக ஸ்பெயின் மிகவும் சிறப்பாகத் தயாராகியிருந்தது. அவர்களின் ஆட்டத் திட்டம் குறைபாடற்றதாக இருந்தது மற்றும் அவர்களின் வெற்றித் தாகம் தெளிவாகத் தெரிந்தது. ஸ்பெயின் ஒரு அணியாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, உலகக் கோப்பையை வெல்ல முழுத் தகுதியைப் பெற்றது" என்றார் கங்குலி.
"இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதே அர்ஜென்டினாவுக்கு ஒரு பெரிய சாதனைதான். ஆனால் கால்பந்தில் ஒரு அணி வெல்லும், மற்றொரு அணி தோற்கும். இதுவே விளையாட்டின் இயல்பு. அன்று ஸ்பெயின் சிறந்த அணியாகச் செயல்பட்டு கோப்பையை வென்றது" என்று அவர் கூறினார்.
"மெஸ்ஸி போன்ற ஒரு ஜாம்பவானின் பங்களிப்பையோ அல்லது அவரது விளையாட்டு வாழ்க்கையையோ மதிப்பிட ஒரு போட்டியின் முடிவை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இத்தொடர் முழுவதும் ஸ்பெயின் சிறப்பாக விளையாடியது. இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இரு முறையும் கோப்பையை வென்றது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை" என்று சௌரவ் கங்குலி கூறினார்.


Click it and Unblock the Notifications

