வாஷிங்டன்: 16 அணிகள் இடையிலான 45வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற காலிறுதியில் வெனிசுலா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி தோற்கடித்தது.
அர்ஜென்டினா அணியின் ஸ்டார் பிளேயரும், உலக பிரசித்தி பெற்ற கால்பந்தாட்டக்காரருமான லியோனல் மெஸ்சி ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் அடித்த கோல், இந்த தொடரில் அவர் அடித்த 4வது கோலாகும். மேலும் அதில் ஒரு சாதனையையும் படைத்தார் மெஸ்சி.
அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு வீரர் சர்வதேச போட்டிகளில், 54 கோல்களை இதுவரை அடித்துள்ளது இது இரண்டாவது முறை. எனவே அந்த சாதனை சமன் ஆகியுள்ளது. முன்னதாக கேப்ரியல் பட்டிஸ்டுடா 54 கோல்கள் அடித்திருந்தார்.
வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்ளப்போகிறது அர்ஜென்டினா. அப்போது மெஸ்சி ஒரு கோல் விளாசினால் 55 கோல்களுடன் சாதனையை தகர்க்க முடியும்.
முதுகுவலியால் அவதிப்பட்ட மெஸ்சி, மீண்டும் களமிறங்கியுள்ள போட்டித்தொடர் இதுவாகும். அதிலும்,
லீக் ஆட்டங்களில் பனாமாவுக்கு எதிராக 29 நிமிடங்கள் மட்டுமே அவர் களமிறங்கினார். அதிலும் ஹாட்ரிக் கோல் அடித்தார். அடுத்ததாக பொலிவியாவுக்கு எதிரான போட்டியிலும் பாதி ஆட்டத்துக்கு பிறகு மாற்று வீரராக களமிறங்கினார்.
காலிறுதியில்தான் மெஸ்சி முழு போட்டியையும் ஆடியுள்ளார். அவர் மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அர்ஜென்டினா பயிற்சியாளர் மார்டினோ தெரிவித்தார்.