பெலோ ஹாரிஸாண்டே, பிரேசில்: கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் கடைசி நேர கோலால், அர்ஜென்டினா அணி, ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
கடைசி வரை கோலே இல்லாமல் டிரா ஆகி விடுமோ என்று அர்ஜென்டினா ரசிகர்கள் பீதியாகிப் போயிருந்த நேரத்தில் திடீரென நிகழ்ந்த அந்த மெஸ்ஸி மேஜிக் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்து விட்டது.

கடைசிக் கட்டத்தில் அபாரமான கோலைப் போட்டு தனது அணியை அடுத்த சுற்றுக்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டார் மெஸ்ஸி. ஈரானுக்கு எதிரான இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
இதன் மூலம் 16 அணிகள் மோதும் 2வது சுற்றுக்கு அர்ஜென்டினா முன்னேறியது.
நேற்று நடந்த இப்போட்டியில் வலிமை வாய்ந்த அர்ஜென்டினாவுக்கு கடும் சவாலாக ஆடியது ஈரான். தங்களது முழுத் திறமையையும் பயன்படுத்தி அர்ஜென்டினாவின் கோல் முயற்சிகளைத் தொடர்ந்து தடுத்து வந்தனர் ஈரான் வீரர்கள்.
முதல் பாதியில் ஒரு கோலும் விழவில்லை. இரண்டாவது பாதியிலும் கடைசி வரை அந்த நிலையே நீடித்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் மெஸ்ஸி கோலடித்து விட்டார்.