துபாய்: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு குளோப் சாக்கர் விருதுகளில் சிறந்த வீரருக்கான விருது கிடைத்துள்ளது.
7வது குளோப் சாக்கர் விருதுகள் விழா துபாயில் நடந்தது. அதில் லியோனல் மெஸ்ஸிக்கு சிறந்த வீரர் விருது கிடைத்தது. சிறந்த கிளப்புக்கான பரிசு பார்சிலோனா கால்பந்து அணிக்குக் கிடைத்தது.

இந்த விருது விழாவில் கலந்து கொண்டு பரிசைப் பெற்ற மெஸ்ஸி, இந்த விருது மகிழ்ச்சி தருகிறது. எங்கெல்லாம் விளையாடுகிறோமோ அங்கெல்லாம் வெற்றி பெறுவது சிறந்தது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பார்சிலோனா அணிக்காக ஆடுவது சிறப்பானது. அந்த அணிக்கும், எனக்கும் இந்த ஆண்டு அருமையானதாக அமைந்தது என்றார் மெஸ்ஸி.
மீடியாவின் கவனத்தை ஈர்த்த அணிக்கான விருதும் பார்சிலோனா அணிக்கே கிடைத்தது. அதன் தலைவர் ஜோசப் பார்டோமு சிறந்த கிளப் தலைவருக்கான விருதைப் பெற்றார்.
பெல்ஜியம் கோச் மார்க் வில்மோட்ஸ் சிறந்த கோச்சாகவும், இத்தாலியின் ஆண்டிரியா பிர்லோ, இங்கிலாந்தின் பிராங் லாம்பார்ட் ஆகியோர் சிறந்த கேரியர் வீரருக்கான விருதையும் பெற்றனர்.