பாரிஸ் : பிரான்ஸ் நாட்டில் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி'ஆர் விருது இந்த ஆண்டு லூகா மோட்ரிக்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் 2018 பிஃபா சிறந்த வீரர் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. க்ரோஷியா நாட்டை சேர்ந்த ஒருவர் பலோன் டி'ஆர், விருதை வெல்வது இதுவே முதல் முறை.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்த விருதை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி வென்று வந்தனர். அதை உடைத்துள்ளார் லூகா.
தற்போது 33 வயதாகும் லூகா ரியல் மாட்ரிட் அணியை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவதாக வெல்ல காரணமாக இருந்தார். மேலும், தன் நாட்டுக்காக 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கேப்டன் பொறுப்பேற்று ஆடிய அவர் க்ரோஷியா அணியை இறுதி வரை வழிநடத்திச் சென்றார்.
மேலும், 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார் லூகா. இது போன்ற சிறந்த செயல்பாடுகளை அடுத்து ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை பின் தள்ளி பலோன் டி'ஆர் விருதை தட்டிச் சென்றுள்ளார்.
பலோன் டி'ஆர் சிறந்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ இரண்டாம் இடமும், பிரான்சின் அண்டோயின் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். மெஸ்ஸி-க்கு ஐந்தாம் இடம் மட்டுமே கிடைத்தது.