கேமராவை நோக்கி ஓடி வந்த மாரடோனா.. கேரியரை காலி செய்த அந்த கோல்.. மறக்க முடியாத தருணம்!
புவெனஸ் அயர்ஸ் : அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனாவின் கேரியரை காலி செய்தது 1994 உலகக்கோப்பை தொடரில் அவர் அடித்த கோல்.
60 வயதான கால்பந்து நட்சத்திரம் மாரடோனா இன்று மாரடைப்பால் காலமானார்.
அவரது பழைய நினைவுகளை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அதில் மாரடோனாவின் இந்த சர்ச்சையும் அடங்கும்.

உலகக்கோப்பை நாயகன்
மாரடோனா 1986 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா நாட்டிற்கு கோப்பை வென்று கொடுத்தார். கேப்டனாகவும், வீரராகவும் சிறப்பாகசெயல்பட்டு இருந்தார் மாரடோனா. அடுத்து 1990இலும் அர்ஜென்டினா அணியை உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

ஊக்கமருந்து தடை
அதன் பிறகு அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஊக்கமருந்து தடையும் அதில் அடக்கம். அதன் பின் 1994 உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக பங்கேற்று ஆடினார். அந்த தொடரில் முதல் போட்டியில் கிரீஸ் அணிக்கு எதிராக கோல் அடித்தார்.

ஆக்ரோஷம்
அந்த கோல் அவரது சிறந்த கோல்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. ஆனால், அந்த கோலை அடித்த பின் அவர் கண்களை ஆக்ரோஷமாக வைத்துக் கொண்டு கேமராவை நோக்கி ஓடி வந்து கோல் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஊக்கமருந்து சோதனை
அவரது கொண்டாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து அவருக்கு ஊக்கமருந்து சோதனை செய்யப்பட்டது. அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. அவருக்கு 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

முடிவு
அதன் பின் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவர் மீதான சர்ச்சைகள் பலராலும் தொடர்ந்து பேசப்பட்டது. 1995 முதல் 97 வரை கிளப் அணியான போகா ஜூனியர்ஸ் என்ற அணியில் மட்டுமே ஆடிய அவர் 31 போட்டிகளில் 3 கோல்கள் மட்டுமே அடித்தார்.


Click it and Unblock the Notifications