தங்கப் பந்து வாங்க அருகதையே இல்லாதவர் மெஸ்ஸி...சொல்வது "குருஜி" மாரடோனா!
பியுனஸ் ஏர்ஸ்: ஃபீஃபா கோல்டன் பால் அதாவது தங்க பந்து விருது பெற லியோனல் மெஸ்ஸிக்குத் தகுதி இல்லை என்று அர்ஜென்டினாவின் முன்னாள் ஜாம்பவான் டியகோ மாரடோனா தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி மொத்தம் 4 கோல்கள் அடித்தார்.
அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டி வரை வர மெஸ்ஸியின் கோல்கள் உதவின. ஆனால் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் மேஜிக் பச்சா பலிக்கவில்லை. அர்ஜென்டினா தோற்றுப் போய் விட்டது.
இந்நிலையில் மெஸ்ஸிக்கு ஃபீஃபா தங்க பந்து விருது வழங்கப்பட்டது.

பார்த்துப் பார்த்து வளர்த்த மாரடோனா
இது குறித்து முன்னாள் அர்ஜென்டினா கேப்டனும், மெஸ்ஸியை பார்த்துப் பார்த்து வளர்த்தவரும், கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் பயிற்சியாளராக இருந்தபோது மெஸ்ஸிக்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவரான மாரடோனா கருத்து தெரிவித்துள்ளார்.

தகுதியே இல்லை
கோல்டன் பால் விருதை பெற மெஸ்ஸிக்கு தகுதி இல்லை. தகுதியில்லாத அவருக்கு விருது கிடைத்துள்ளது. இது நியாயமே இல்லை.

மெஸ்ஸியே விரும்பவில்லை
விருதை பெற மெஸ்ஸி விரும்பாததை நான் பார்த்தேன். உலகக் கோப்பை போட்டிகளில் 6 கோல்கள் அடித்த கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸுக்கு தான் தங்க பந்து விருதை கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

ஏன் கோபம்...
மெஸ்ஸியின் குருவான ஜாம்பவான் மாரடோனா ஏன் திடீரென இப்படிப் பாய்ந்துள்ளார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை காலால் கோல் போட முடியாட்டியும் தன்னைப் போல கையால் கோல் போட்டு அர்ஜென்டினாவை மெஸ்ஸி கரை சேர்த்திருக்கலாமே என்ற ஆதங்கத்தில் இப்படிச் சொல்லி விட்டாரோ என்னவோ....!


Click it and Unblock the Notifications