மாஸ்கோ: உலகக் கோப்பை வரலாற்றில், ஒரே ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்த இளம் வீரர் என்ற சாதனையில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார் பிரான்ஸின் மாப்பே.
21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் பிரான்ஸ், அர்ஜென்டினா மோதின. மேஜிக்மேன் லியோனல் மெஸ்ஸின் அர்ஜென்டினாவே வெற்றிபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் 2-2 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தபோது, பிரான்ஸின் 19 வயதாகும் கிளியான் மாப்பே 64 மற்றும் 68வது நிமிடங்களில் தொடர்ந்து இரண்டு கோல்கள் அடிக்க, பிரான்ஸ் வெற்றி உறுதியானது.
பிரேசிலின் நெய்மருக்கு அடுத்தபடியாக உலகின் காஸ்ட்லியான வீரரான மாப்பே, பெருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கோலடித்து பிரான்ஸ்க்கு வெற்றியைத் தேடித் தந்தார். அர்ஜென்டினாவுக்கு எதிரான இன்றாய ஆட்டத்தில் அவர் இரண்டு கோல்கள் அடித்தார். இதன் மூலம், மிகவும் குறைந்த வயதில் ஒரு ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் புரிந்தார்.
பிரேசிலின் பீலே, 1958ல் நடந்த பைனலில் இரண்டு கோல்கள் அடித்தார். அப்போது அவருக்கு வயது 17. 60 ஆண்டுகளுக்குப் பிறகு பிலேயின் அந்த சாதனையை எட்டியுள்ளார் இரண்டாவது பீலேவான மாப்பே.