லிவர்பூல் அணியின் மேனேஜர் அணியின் கிளாப்பிடம் இருந்து கோப்பையை தொடர்ச்சியாக வெல்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்சனல் அணியின் மேனேஜர் ஆர்டெட்டா தெரிவித்துள்ளார்.
பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லிவர்பூல் அணியை எதிர்த்து ஆர்சனல் அணி களமிறங்குகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணியும், 3வது இடத்தில் உள்ள ஆர்சனல் அணியும் மோதவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு சீசனுடன் லிவர்பூல் அணியின் மேனேஜர் கிளாப் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.

2015ஆம் ஆண்டு முதல் லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கிளாப் அந்த அணிக்காக வென்று கொடுக்காத கோப்பைகளே இல்லை என்று சொல்லலாம். பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக், எஃப்ஏ மற்றும் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார். அதேபோல் கடந்த சீசனில் 248 நாட்களில் புள்ளிப்பட்டியலில் உச்சத்தில் இருந்தது ஆர்சனல் அணி. அதற்கு அந்த அணியின் மேனேஜரான ஆர்டெட்டா முக்கிய காரணம்.
இந்த இரு அணிகளின் பயிற்சியாளர்களும் கடைசி முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளனர். இந்த நிலையில் கிளாப்பை எதிர்த்து கடைசி முறையாக மோதவுள்ளது குறித்து ஆர்டெட்டா பேசுகையில், முதலில் எங்கள் மக்கள், எங்களின் கிளப், எங்கள் அணி ஆகியவற்றுக்கு பெருமையளிக்கும் வகையில் விளையாட வேண்டும்.
அதனை கிட்டத்தட்ட நிறைவேற்றி இருந்தாலும், இம்முறை தேவைகள் அதிகமுள்ளது. சாம்பியன் பட்டம் மற்றும் கோப்பைகளை தொடர்ச்சியாக வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அனைத்து அணிகளின் எண்ணமும் அது தான். லிவர்பூல் அணி அதனை தொடர்ச்சியாக செய்துள்ளது. ஆர்சனல் அணி அதனை செய்யவில்லை. கிளாப்பிடம் இருந்து அதனை தான் எடுத்து கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 10 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தினால், மான்செஸ்டர் சிட்டி அணியை பின்னுக்கு தள்ளி ஆர்சனல் அணியால் முன்னேற முடியும். டாப் 4 அணிகளுக்கு இடையிலான புள்ளி வித்தியாசங்கள் குறைவாக இருப்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.