
பயிற்சியாளர் மாற்றம்
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் பிரேசிலுக்கு டி.சில்வா கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். பயிற்சியாளராக லூயிஸ் பெலிப் ஸ்கோலரி பதவி வகித்தார். அரையிறுதியில் அடைந்த படுதோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் மாற்றப்பட்டு துங்கா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நெய்மர் கேப்டன்
இந்நிலையில் அணியின் புதிய கேப்டனாக 22வயதேயான நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். துங்காவின் சிபாரிசை ஏற்று அந்த நாட்டு கால்பந்தாட்ட சங்கம் இம்முடிவை எடுத்துள்ளது. இன்று நடைபெற உள்ள கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் நெய்மர் தலைமையில் பிரேசில் களம் காண்கிறது.

பிறருக்கு உத்வேகம் அளிப்பார்
துங்கா நிருபர்களிடம் இதுகுறித்து கூறுகையில், "கேப்டன் என்பவர் பிற வீரர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நெய்மரின் உத்வேகம் அணி முழுமையையும் தொற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.

அடுத்த முறை கப் பிரேசிலுக்குதான்
அருமையான வீரர்களை கேப்டனாக கொண்டிருந்தபோதெல்லாம் பிரேசில் உலக கோப்பையை வென்று காண்பித்துள்ளது. எனவே 2018ம் ஆண்டு உலக கோப்பையை நெய்மர் தலைமையில் பிரேசில் வெல்லும்" என்றார்.

இளம் கேப்டன்
பிரேசில் கால்பந்தாட்ட வரலாற்றில் மிக சிறிய வயதில் கேப்டன் பொறுப்புக்கு வந்த முதலாவது வீரர் என்ற பெருமையை நெய்மர் தட்டிச் சென்றுள்ளார். உலக கோப்பை போட்டியின்போது முதுகில் காயம் ஏற்பட்டு நெய்மர் அணியில் இருந்து விலகிய பிறகுதான் அந்த அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications













