கோலாலம்பூர்: மலேசியாவின் கோட்டா பாரு நகரில் நடந்த கால்பந்தாட்ட போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த நைஜீரியாவைச் சேர்ந்த வீரர் டேவிட் ஒனியா மரணம் அடைந்தார்.
நைஜீரியாவைச் சேர்ந்தவர் டேவிட் ஒனியா(30). அவர் அண்மையில் தான் மலேசிய கிளப்பில் சேர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மலேசியாவில் உள்ள கோட்டா பாரு நகரில் டி-டீம் மற்றும் கெலந்தான் அணிக்கும் இடையே நட்பு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டி-டீம் சார்பில் ஒனியா கலந்து கொண்டு விளையாடினார். போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் ஒனியா மைதானத்தில் மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் 30 நிமிடங்கள் போராடியும் ஒனியாவை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி அறிந்ததும் கால்பந்து போட்டி கைவிடப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மலேசிய கிளப் தலைவர் முகமது ஜெயின் கூறுகையில்,
ஒனியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஆக்சிஜன் கிடைக்காமல் பல நிமிடங்கள் போராடினார். இது நட்புக்கான போட்டி தான். அதனால் யாரும் வேகமாகக் கூட ஓட வேண்டியது இல்லை. ஆம்புலன்ஸ் டிரைவர் துரிதமாக செயல்படவில்லை என்றார்.