
கால்பந்து அணி
பாலஸ்தீனத்தில் ஊனமுற்றோருக்கான தேசிய கால்பந்து அணி ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி 20 வீரர்கள் கொண்ட கால்பந்து அணி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராணுவ தாக்குதல்களில் உடல் பாகங்களை இழந்தவர்கள், விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் என வீரர்கள் இணைந்திருந்தனர்.

உலகக்கோப்பை டார்கெட்
சர்வதேச ரெட் கிராஸ் அமைப்பின் ஆதரவின் பேரில் பாலஸ்தீனத்தில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய அணியானது அடுத்தாண்டு டர்க்கியில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்காக அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

ஒரு நபரின் முயற்சி
ஐரோப்பாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான கால்பந்து அமைப்பின் தலைமை அதிகாரியாக இருக்கும் சிமோன் பேகர் என்பவர் தான் இந்த அணியை உருவாக்கியவர். மாற்று திறனாளியான பேகர், கடந்த 2019ம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு வருகை தந்து அங்குள் காசா நகரத்தில் வீரர்களை கண்டறிய முயன்றார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 15 பயிற்சியாளர்கள், 12 நடுவர்கள், 80 கால்பந்து வீரர்களை அவர் உருவாக்கியுள்ளார். அதில் இருந்து தான் தற்போது 20 பேர் கொண்ட தேசிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.

கண்ணீர்
பெரும் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள், இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து பகிர்ந்தனர். அதில், உடல் பாகங்கள் இல்லை என்று பல்வேறு நாட்கள் மன வேதனையுடன் வாழ்ந்துள்ளோம். அவற்றிற்கெல்லாம் பதில் கூறும்படியான விஷயம் தான் தற்போது நடைபெற்று வருகிறது என ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications

