ஒலிம்பிக் தீபம் ஏற்றுவதில் பீலேவுக்கு ஒரு சிக்கல்
ரியோ: மரக்காணா மைதானத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற வருமாறு கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அழைப்பு விடுத்துள்ளது போட்டி ஏற்பாட்டுக் குழு. ஆனால் பீலேவோ, தனது ஸ்பான்சர் நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
75 வயதான கால்பந்து ஜாம்பவான் பீலே, மூன்று உலககக் கோப்பைகளை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தவர். கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஒலிம்பிக் தீபம் ஏற்றுவது குறித்து கருத்து கூறியுள்ள அவர், பிரேசிலைச் சேர்ந்தவன் என்ற முறையில் இந்த ஒலிம்பிக்கில் தீபத்தை ஏற்ற விரும்புகிறேன்.

ஆனால் நான் அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால், எனது பெயரை உபயோகிக்கும் உரிமையும் அந்த நிறுவனத்திடம் தான் உள்ளது. அவர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. எனவே ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவதற்காக வந்துள்ள அழைப்பை ஏற்பது குறித்து என்னை ஒப்பந்தம் செய்துள்ள ஸ்பான்சர் நிறுவனத்துடன் ஆலோசித்து வருகிறேன் என்றார்.
பீலே தனது ஸ்பான்சர் நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற முடியும் என தெரிவித்துள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications