
வெளியேறிய ரொனால்டோ
சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரான்ஸ் அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ காயம் காரணமாக மைதானத்திலிருந்து கண்ணீர் விட்டபடியே வெளியேறினார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரொனால்டோ வெளியேறியதால் அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ரொனால்டோ இல்லாமல் போர்த்துக்கல் அணி எந்தளவு தூரம் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்திருக்கும் எனும் கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.

அனல் பறந்த ஆட்டம்
இரு அணிகளும், அடிக்கடி எதிரணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட, ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆனால், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்காததால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலை வகித்தது.

நகம் கடித்த ரசிகர்கள்
இரண்டாவது பாதி ஆட்டத்திலும், இரு அணி வீரர்களும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை மாறி, மாறி வீணாக்கினர். இரு அணி கோல் கீப்பர்களும் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சியைத் தொடர்ந்து தடுத்தனர். ஆட்டத்தின் இறுதியான 90ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிக்னாக், ஆறடி தொலைவிலிருந்து அடித்த பந்து, கோல் போஸ்ட்டில்பட்டு வெளியேற, பிரான்ஸ் ரசிகர்கள் அமைதியாக ஆட்டத்தை நகத்தை கடித்தபடியோ ரசித்தனர்.

கோல் அடித்த போர்ச்சுக்கல்
ஆட்ட நேர முடிவில் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரத்தில் 109ஆவது நிமிடத்தில் ரொனால்டோவுக்கு மாற்று வீரராக களமிறங்கிய ஆன்டனியோ ஈடர் அசத்தலாக கோல் அடிக்க, பிரான்ஸ் அணி வீரர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

வெற்றி பெற்ற போர்ச்சுக்கல்
கடைசி வரை பிரான்ஸ் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், போர்ச்சுகல் அணி முதன் முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றி, புதிய வரலாற்றை படைத்தது. இதன்மூலம், யூரோ தொடர் மகுடத்தை சூட்டிக் கொண்டது போர்ச்சுகல் அணி.

ரொனால்டோ முத்தம்
இறுதிப் போட்டி தன்னால் வெற்றி பெறவில்லை என்ற போதும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகவும் உணர்ச்சிவசத்துடன் வெற்றியை கொண்டாடினார். விளையாட முடியாமல் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய அவர், வெற்றிக் கோப்பையை கையில் வாங்கிய அந்த தருணத்திலும் கண்ணீர் வடித்தார். இம்முறை அது ஆனந்தக்கண்ணீர். யூரோ கோப்பையை அன்போடும் ஆசையுடனும் முத்தமிட்டார். காரணம், அவர் ஒரு புதிய வரலாறை உருவாக்கியுள்ளார் என்பதை போர்ச்சுக்கல் ரசிகர்களால் மறக்க முடியாது.

வரலாற்று சாதனை
19 வயதில் முதன்முறையாக யூரோ தொடரில் களமிறங்கிய ரொனால்டோ இதுவரை நான்கு முறை யூரோ கால்பந்து போட்டிகளில் போர்த்துக்கல் அணிக்காக விளையாடி அதிகம் கோல் அடித்த வீரர் எனும் பெருமையை பெற்றிருந்தார். தற்போது 31 வயதாகும் அவர் தனது வழிநடத்தலின் கீழ் போர்த்துக்கல் அணியை இறுதிப் போட்டிவரை கொண்டு வந்து கோப்பையை வெல்ல தானும் பின்னணியாக இருந்துள்ளார்.

சோகத்தில் பிரான்ஸ் ரசிகர்கள்
யூரோ கால்பந்து கோப்பையை தங்கள் நாட்டு அணி வென்றதை போர்ச்சுக்கல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரான்ஸ் தனது சொந்த மண்ணில் ஒரு போட்டியில் தோற்றிருக்கிறது. அதுவும் யூரோ இறுதிப் போட்டி என்பதுதான் அவர்களுக்கு சோகமாகிப் போனது.


Click it and Unblock the Notifications













