பெங்களூரு: ஐ-லீக் கால்பந்து போட்டியின் 2-வது டிவிஷனில் விளையாடும் ரியல் காஷ்மீர் எப்சி, ஐ லீகுக்கு முன்னேறியது.
ஐ-லீக் கால்பந்து 2-வது டிவிஷன் போட்டிகள் பெங்களூரில் நடந்தன. இதில், நேற்று நடந்த கடைசி ஆட்டத்தில் ஹிந்துஸ்தான் எப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் எப்சி வென்றது.

இதன் மூலம் 2-வது டிவிஷன் போட்டிகளில் 7 புள்ளிகள் பெற்று சாம்பியனானது. மேலும் ஐ-லீக் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றது. ஐ லீக் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முதல் கால்பந்து கிளப் என்ற பெருமையை ரியல் காஷ்மீர் எப்சி பெற்றுள்ளது.
நேற்று நடந்த ஆட்டத்தில் ஒரு புள்ளியைப் பெற்றாலே இந்த சீசன் சாம்பியனாக முடியும் என்ற நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் வென்று 3 புள்ளிகளைப் பெற்றது ரியல் காஷ்மீர் எப்சி.
அந்த அணியின் தாரிக் மிர் (22வது நிமிடம்), டேனிஷ் பரூக் (42வது நிமிடம்), நடாங்க் பூட்டியா (67வது நிமிடம்) கோலடித்தனர். ஹிந்துஸ்தான் எப்சியின் குஷாந்த் சவுகான் 34 மற்றும் 80வது நிமிடங்களில் கோலடித்தார்.