சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியை, நேரில் கண்டு உற்சாகப்படுத்தினார் ரஜினிகாந்த்.
இந்தப் போட்டியில் சென்னை அணி, கேரள ப்ளாஸ்டர்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் சென்னையில் அரங்கேறிய முதல் ஆட்டம் இது. அன்று பார்த்து மழையும் பெய்யவில்லை.

சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவர் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன். தன் தந்தை அமிதாப் பச்சனுடன் அவர் நேற்று வந்திருந்தார்.
இந்தப் போட்டிக்கு சென்னையின் விவிஐபி ஒருவரை அழைக்க வேண்டும் என முடிவு செய்த அமிதாப் மனதில், முதலில் தோன்றியவர் ரஜினிதானாம்.
உடனடியாக ரஜினிக்கு அவர் போன் பண்ண, மறுப்பே சொல்லாமல் போட்டியைக் காண வந்துவிட்டார்.
பிளாஸ்டர்ஸ் அணிக்கு ஆதரவாக அந்த அணியின் உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வந்திருந்தார்.
இந்தப் பக்கம் அமிதாப், அந்தப் பக்கம் சச்சின் வீற்றிருக்க, நடுநாயகமாக அமர்ந்து இருவருடனும் பேசிக் கொண்டே சென்னை அணியை உற்சாகப்படுத்தினார் ரஜினி.
போட்டியின் முடிவில் சென்னை அணி, கேரள அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.