முதல் பாதி ஆட்டம்
தொடர்ந்து ஆட்டம் தொடங்கியது முதலே வேல்ஸ் அணி தற்காப்பாக விளையாட, இங்கிலாந்து அணி கோல் அடிக்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தது. அதேபோல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ராஷ்போர்ட் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், வேல்ஸ் அணியினரால் தடுக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தில் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டும், இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிவுக்கு வந்தது.
காத்திருந்த அதிர்ச்சி
ஆனால் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து அணி முதல் கோல் அடித்து அசத்தியது. 50வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில், முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய ராஷ்ஃபோர்ட் முதல் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு நட்சத்திர வீரரான ஃபோடன் இரண்டாவது கோலை அடிக்க, வேல்ஸ் அணியின் உலகக்கோப்பை கனவு கொஞ்சம் கொஞ்சமாக கலைந்தது.
3வது கோல்
இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடர்ந்த நிலையில், தனியாளாக நட்சத்திர வீரர் ராஷ்போர்ட் வேல்ஸ் அணியின் எல்லைக்குள் பந்தை கொண்டு சென்று மூன்றாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் வேல்ஸ் அணியின் நிலை இன்னும் பரிதாபமாக மாறியது. இதன்பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
64 ஆண்டுகள்
அதில் எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில், இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. 64 ஆண்டுகளுக்கு பின் வேல்ஸ் அணி உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், குரூப் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதனால் வேல்ஸ் அணியின் ரசிகர்கள் மைதானத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தினர். அதேபோல் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இங்கிலாந்து அணி செனகல் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.