அப்போ… அகதி, கால்பந்து வீரர்.. இப்போ.. ஆஸ்திரேலிய குடிமகன்..! இதுதான் மனிதநேயம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அகதியாக வாழ்ந்து வந்த பக்ரைன் நாட்டு கால்பந்து வீரருக்கு, அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கியிருப்பது, பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
பக்ரைன் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹக்கிம் அல் அரைபி. 2012ம் ஆண்டு அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல் நிலையத்தை சேதப்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டது.
ஆனால், போராட்டம் நடைபெற்றபோது தான் பக்ரைன் அணிக்காக விளையாடியதாக கூறி அந்த குற்றச்சாட்டை மறுத்தார். தொடர்ந்து, 2014ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

அகதிகள் அந்தஸ்து
அங்குள்ள கிளப் அணிகள் சார்பில் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று வந்த அவருக்கு 2017ம் ஆண்டு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறிய அல் அரைபியை பிடிக்குமாறு பக்ரைன் அரசு சர்வதேச போலீசாருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

தாய்லாந்தில் தேனிலவு
இந்நிலையில், 2018ம் ஆண்டு தனது மனைவியுடன் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றை அல்-அரபியை பாங்காக்கில் வைத்து சர்வதேச போலீசார் கைது செய்தனர்.

சிறை, விடுதலை
பின்னர் அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்யும்படி பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆஸி.குடியுரிமை
இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசு அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற விழாவில், அல் அரைபி உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த 200 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது.

பாதுகாப்பான உணர்வு
இதுகுறித்து அல் அரைபி கூறியதாவது: இப்போது முதல் தான் ஒரு ஆஸ்திரேலியர் என்று உணர்கிறேன். மேலும், தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications