கோலாலம்பூர்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் கால்பந்து பிரிவில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்படுவதால், போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பிடிவாதத்தால், இந்திய அணி பங்கேற்கவில்லை.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கால்பந்து பிரிவுக்கான கால அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில், தங்களுடைய பெயர்கள் சேர்க்கப்படவில்லை என ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் பாலஸ்தீனம் மனு கொடுத்தன.
தங்களுடைய விண்ணப்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாதபோதும், போட்டியில் தங்களுடைய பெயர் சேர்க்கப்படவில்லை என்று அவை கூறின. அதையடுத்து அந்த இரண்டு அணிகளையும் சேர்த்து, புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது.
இவ்விரு அணிகளும் சேர்ந்துள்ளதால், இந்த ஆசியக் கோப்பையில் கால்பந்து பிரிவில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இவை தலா நான்கு அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும். அதைத் தவிர, இரண்டு பிரிவுகளில் தலா 5 அணிகள் இருக்கும்.
கால்பந்து உலகத் தரவரிசையில் 173வது இடத்தில் இருந்து இந்தியா 97வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருந்தாலும், ஆசிய தரவரிசையில் 8 இடங்களுக்குள் உள்ள விளையாட்டு அணிகளை மட்டுமே அனுப்ப இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது. அதனால், 14வது இடத்தில் உள்ள கால்பந்து அணியை அனுப்புவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுத்தது. இந்த முடிவுக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்தியா இழந்தது.