ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விளையாட்டு திருவிழா நிறைவு பெற இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ளன.
இந்தியா சார்பில் போன 120 வீரர்-வீராங்கனைகளில் எஞ்சியிருந்தது கோல்ஃப் வீராங்கனை, அதிதி அசோக் மற்றும் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மட்டுமே.
இதில், அதிதி அசோக் மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. சாக்ஷி மாலிக் மற்றும் பி.வி.சிந்து அடுத்தடுத்த நாட்களில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தந்த நிலையில், மற்றொரு பெண்மணியான அதிதி அசோக் மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
இன்றைக்கு இந்தியா பங்கேற்றது ஒரே போட்டியில்தான். அதுவும் அதிதி அசோக் பங்கேற்கும் ஆட்டம்தான். மாலை 4 மணிக்கு தொடங்கிய, பெண்களுக்கான கோல்ப் இறுதி ஆட்டத்தில் அதிதி அசோக் பங்கேற்றார். ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தடுமாற்றம்தான் மிஞ்சியது.
பந்தை குறிபார்த்து அடிப்பதில் தவறியதால், ஆட்டத்ததின் பாதி வேளையில் அவர் 33வது இடத்திலேயே இருந்தார். இரவு 8.15 மணியளவில் 40வது இடத்தை பிடித்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார். அவர் 'பிளஸ் 7' புள்ளிகள் பெற்றிருந்தார்.
இந்தியாவுக்கு இருந்த இந்த பதக்க நம்பிக்கை தகர்ந்துவிட்டது. அதேநேரம், 18 வயதாகும் அதிதியின் ஆட்டம், இந்தியாவில் மகளிர் கோல்ப் மீது ஈர்ப்பை உருவாக்கும் என நம்பலாம்.
இந்திய அணிக்காக 12 வயதில் இருந்து விளையாடி வருகிறார் பெங்களூர் வீராங்கனையான அதிதி. 5 வயதிலேயே கோல்ப் மட்டையை கையில் எடுத்தவர். 2012 முதல் 2014வரை தொடர்ந்து மூன்று முறை தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
அதேபோல, இரண்டு முறை தேசிய அமெச்சூர் சாம்பியனாகியுள்ளார். 6 சர்வதேச போட்டிகளிலும், அதிதி வென்று இருக்கிறார்.
நேற்று நடந்த ஆட்டத்தில், 24வது இடத்தில் இருந்து 31வது இடத்திற்கு தள்ளப்பட்டது இவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.