சாவோ பாலோ: ரியோ ஒலிம்பிக் போட்டிக்காக கால்பந்து ஜாம்பவான் பீலே தானே இசையமைத்து ஒரு பாடலைப் பாடி வெளியிட்டுள்ளார்.
எஸ்பெரன்கா அதாவது நம்பி்க்கை என்ற தலைப்பிலான அந்தப் பாடல் ஒலிம்பிக் போட்டிக்காக பீலே தயார் செய்த பிரத்யேகப் பாடலாகும்.
இந்தப் பாடல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பீலே. இந்தப் பாடல் குறித்து பீலே கூறுகையில்,இதை நானே எழுதினேன். பதிவும் செய்துள்ளேன். ஜூலை 15ம் தேதி இப்பாடல் வெளியாகும் என்று கூறியுள்ளார் பீலே.
நான்கு நாட்களுக்கு முன்புதான் மார்சியா சிபெல்லி அயோக்கி என்ற பெண்மணியை 3வது திருமணம் செய்தார் பீலே. சூட்டோடு சூடாக ஒலிம்பிக்குக்கு ஒரு பாட்டையும் போட்டு அசத்தியுள்ளார்.
Eu escrevi e gravei uma cançao chamada "Esperança". Mal posso esperar para compartilha-la com voces, 15 de julho! pic.twitter.com/MfZTPrmWEx
— Pelé (@Pele) July 12, 2016
பாட்டும், பீலேவும் இணை பிரியாதவர்கள். மறைந்த பிரேசில் பாப் சூப்பர்ஸ்டார் எலிஸ் ரெஜினாவுடன் இணைந்து பல பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் பீலே. மேலும் சம்பா இசை சாயலில் கிறிஸ்துமஸ் பாடல்களையும் அவர் இயற்றி பாடி வெளியிட்டுள்ளார். சிறார்களுக்காகவும் பல பாடல்களைப் பாடியுள்ளார் பீலே என்பது கூடுதல் செய்தி.