டெல்லி:உலகக் கோப்பை போட்டியில் நாக்அவுட் சுற்றில் வெளியேறிய போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிரீஸில் தான் தங்கியிருந்த ரிசார்ட் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சத்தை டிப்சாக அளித்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில் நடந்த ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடினார். ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அவர் அடித்தார். போர்ச்சுகல் அணி நாக் அவுட் சுற்றிலேயே வெளியேறியது.
அதையடுத்து குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன், கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் விடுமுறையை கழித்தார் ரொனால்டோ.
உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ மூன்றாவது இடத்தில் உள்ளார். சமீபத்தில் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜூவன்டஸ் அணிக்கு மாறினார். இதற்காக ரூ.900 கோடிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கிரீஸ் ரிசார்ட்டில் இருந்தபோது, ஜூவன்டஸ் அணி நிர்வாகிகளை சந்தித்து ஒப்பந்தத்தை அவர் உறுதி செய்தார். இந்த விடுமுறை இனிதாக இருந்ததால், ரொனால்டோ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
அதனால், அந்த ரிசார்ட் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சத்தை டிப்சாக வழங்கியுள்ளார். குடும்பத்துடன் ஜாலியாக ஹாலிடே கொண்டாடிய படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.