டெல்லி:தற்போது விளையாடி வரும் உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிரிஸ்டியானோ ரொனால்டோ ஃபிபா உலகக் கோப்பைக்காக தயாராகி வருகிறார். இந்த நிலையில், அவருடைய ஜூனியரும் தந்தையைப் போலவே கலக்குவதற்கு தயாராகி வருகிறார்.
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வரும் 14ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில், இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 நாடுகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.

இந்த உலகக் கோப்பையில் ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் எதிர்பார்க்கும் வீரர்களில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர். போர்ச்சுகல் மற்றும் அல்ஜீரியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடந்தது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றது.
இந்த ஆட்டம் முடிந்ததும், ரொனால்டோவின் 7வயது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் மேலும் சில சிறுவர்களுடன் மைதானத்தில் களமிறங்கினார்.
மைதானத்தில் இருந்த வீரர்களும், ரசிகர்களும் அந்த சிறுவர்கள் விளையாடுவதை பார்த்தனர். அப்போது, ரொனால்டோவின் மகன் அபாரமாக ஒரு கோல் அடித்து அசத்தினார். முதலில் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரொனால்டோ பின்னர் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்.
சரி யார் இந்த கிறிஸ்டியான்யின்ஹோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ரொனால்டோவின் மகன்தான் அது. இதுதான் அந்த சிறுவனின் செல்லப் பெயர்.