நஷ்டம் ஓவரா இருக்கு... கேரளா ப்ளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் பங்குகளை விற்ற சச்சின்
மும்பை : சச்சின் டெண்டுல்கர் கேரளா ப்ளாஸ்டர்ஸ் கால்பந்து அணியில் தனக்கு இருந்த பங்குகளை விற்றுள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் இந்திய உள்ளூர் கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணியில் ஒன்றாக கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி உள்ளது. அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நட்சத்திர நடிகர்களான சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், நாகர்ஜுனா ஆகியோர் பங்குகள் வைத்துள்ளனர்.
இதில் சச்சின் முதலில் 40 சதவீத பங்குகளை வைத்து இருந்தார். இடையில் அதில் பாதி பங்குகளை மற்ற பங்குதாரர்களிடம் விற்றார். இப்போது மீதமிருந்த 20 சதவீத பங்குகளையும் அவர்களிடமே விற்றுவிட்டார் என கூறப்படுகிறது.

ஐஎஸ்எல் நஷ்டம்
சச்சின் தன் பங்குகளை விற்க காரணம், தொடர் நஷ்டம் தான் எனக் கூறப்படுகிறது. வியாபார ரீதியாக இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கிளப்கள் எதுவுமே இன்னும் லாபம் சம்பாதிக்க துவங்கவில்லை. இந்தியன் சூப்பர் லீக் தொடங்கிய ஐந்து ஆண்டுகளாக நஷ்டம் மட்டுமே சந்தித்து வந்துள்ளன. இந்த கிளப் அணிகள் தாங்கள் செலவு செய்த தொகையை ஈட்டவே 2022ஆம் ஆண்டு வரை ஆகும் என நிதி ஆலோசகர்கள் கணக்கிட்டுள்ளனர்.

நஷ்டத்தில் சச்சின்
கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி இதுவரை ஐந்து ஆண்டுகளில் 100 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதில் சச்சினுக்கு கடந்த ஆண்டு மட்டும் 15 கோடி நஷ்டம் என கூறப்படுகிறது. அதையடுத்தே, சச்சின் தன் பங்குகளை விற்க முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

கூட்டத்தை கூட்டிய சச்சின்
இதில் சச்சினுக்கு ஒவ்வொரு வருடமும் சிறப்பு அழைப்பாளர் அந்தஸ்தில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அவர் மைதானத்துக்கு வந்து போட்டிகளை பார்க்கவே இந்த தொகை அளிக்கப்பட்டது. அதற்கேற்ப சச்சின் கூட்டத்தை திரட்டியதும் உண்மை.

என் இதயம் துடிக்கும்
அடுத்த கட்டமாக, கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியை மொத்தமாக அதன் மற்ற பங்குதாரர்கள் ஒரே நபருக்கு அல்லது நிறுவனத்துக்கு விற்க உள்ளனர். அதற்கு முன்னதாகவே, சச்சின் தன் பங்குகளை மற்ற பங்குதாரர்களிடமே விற்று இருக்கிறார் என்ற தகவலும் வந்துள்ளது. "என் இதயத்தின் ஒரு ஓரம் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணிக்காக எப்போதும் துடிக்கும்" என சொல்லிக் கொண்டு விடை பெற்றுள்ளார் சச்சின்.


Click it and Unblock the Notifications