தாக்கா : சாப் (SAFF) கால்பந்து கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. அதில் இன்று நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு ஏழு மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும், கால்பந்து அரங்கில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் விளையாட வந்துள்ளது.
மறுபுறம், இந்திய அணியில் அனுபவ வீரர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு வீரர் மட்டுமே 23 வயதுக்கு மேற்பட்டவர். மற்ற வீரர்கள் அனைவருமே, அண்டர் 23 பிரிவை சேர்ந்தவர்கள்.
சுமார் பத்து ஆண்டுகள் கழித்து இந்தியா, பாகிஸ்தான் கால்பந்து போட்டியில் மோதவுள்ளது என்ற காரணமும், அதுவும் ஒரு அரையிறுதியில் மோதவுள்ளது என்ற காரணமும், இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் இதுவரை இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளை வீழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் இலங்கையிடம் தோற்றாலும், நேபால், பூட்டான் நாடுகளை வீழ்த்தியுள்ளது.
இது பற்றி இந்திய பயிற்சியாளர் கான்ஸ்டன்டின் கூறுகையில், "நாங்கள் இந்த மோதலைப் பற்றி நன்கு அறிந்து கொண்டுள்ளோம். ஆனால், இது ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. இது மற்றுமொரு போட்டி. நாங்கள் சூழ்நிலைகள் எங்களை மீறி செல்வதை விடமாட்டோம். மேலும், இவர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்வோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.