ஜூரிச்: சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா-வின் தலைவர் பதவியில் இருந்து செப் பிளாட்டர் திடீரென ராஜினாமா செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு கால்பந்து போட்டிகளில் சுமார் ரூ.641 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேபோல் பல்வேறு ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் பிஃபாவின் மீது சுமத்தப்பட்டன. இந்த களேபரங்களுக்கு மத்தியில் பிஃபா அமைப்பின் தலைவராக 5-வது முறையாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த 79 வயதான செப் பிளாட்டர் கடந்த மாதம் 29-ந் தேதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும் பிஃபா அமைப்பின் மீதான ஊழல் முறைகேடு புகார்கள் தொடர்ந்ததால் செப் பிளாட்டர் நேற்று திடீரென தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
உலக கால்பந்து அமைப்பில் தனக்கு முழுமையான ஆதரவு கிடைக்காததால் இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர், தலைவர் பதவிக்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் என்றும் அதுவரை தாம் தலைவராக தொடருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பிளாட்டரின் இந்த ராஜினாமா அறிவிப்பு சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.