டெல்லி: ரஷ்யாவில் நடந்த 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் 11.05 கோடி பார்த்துள்ளனர். இந்தப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பிய சோனி டிவிக்கு விளம்பரம் மூலம் ரூ.200 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்தது. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15ம் தேதி வரை நடந்தது. இதில் பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.

இந்த உலகக் கோப்பை போட்டிகளை சோனி டிவி நிறுவனம் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பியது. மொத்தம் 64 ஆட்டங்களை நேரடியாக ஒளிபரப்பியது. நாடு முழுவதும் 11.05 கோடி பேர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை டிவியில் பார்த்ததாக சோனி டிவி கூறியுள்ளது. பிரான்ஸ் மற்றும் குரேஷியா இடையே நடந்த பைனலை மட்டுமே 5.12 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இந்த ஒளிபரப்பின் மூலம் இந்தியாவில் சோனி டிவி நிறுவனத்துக்கு விளம்பரம் மூலம் ரூ.200 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையை ஒளி்பரப்பியதன் மூலம் ரூ.100 கோடி வருவாய் கிடைத்திருந்தது.
முதல் முறையாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மொழிகளிலும் வர்ணனை அளிக்கப்பட்டது. பிராந்திய மொழி சேனல்களை மட்டும் 4.07 கோடி பேர் பார்த்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 2.22 கோடி பேர் பார்த்துள்ளனர். கேரளாவில் 1.78 கோடி பேர், மகாராஷ்டிராவில் 1.28 கோடி, வடகிழக்கு மாநிலங்களில் 1.14 கோடி பேர் நேரடி ஒளிபரப்பை பார்த்து ரசித்துள்ளனர். உலகக் கோப்பை போட்டி நேரடி ஒளிபரப்பை பார்த்தவர்களில் 43 சதவீதம் பேர் பெண்கள் என்று சோனி டிவி கூறியுள்ளது.